Tuesday, September 28, 2010

"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"

"

"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"



****** பாடல் ******

ராகம்: பைரவி
தாளம்: திஸ்ர ஏகம் [3]

தனன தனன தனன தனன
தனன தனன....... தனதான

திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் வரவேநின்

அருள தருளி எனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள மிகவே நீள்

சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.



****** பொருள் விளக்கம் ******
[வழக்கம் போல் பின் பார்த்து முன்]
[சிறிய பாடலுக்கு நீட்டி முழக்க வேண்டியிருக்காது என நினைத்தேன்! முழக்கித்தானிருக்கிறேன்!:))]

"சமர முக வெல் அசுரர் தமது
தலைகள் உருள
மிகவே நீள் சலதி அலற
நெடிய பதலை தகர
அயிலை விடுவோனே"

நிலையான தவம் செய்து
அழியாத வரம் பெற்று
எவராலும் வெல்லாத
திறன் கொண்ட இராக்கதரின்
தலைகளெல்லாம் உருண்டிடவும்,

வற்றாத நீருடைய
பரந்திருக்கும் நீளமுடை
கடலினிடை சூரன் ஒளிய
முற்றாக அது வற்றி
அற்றாது அது கதறிடவும்

மாயங்கள் புரிகின்ற
கிரௌஞ்சமெனும் மலையாக
தாரகனும் உருமாற
நெடிதுயர்ந்த அம்மலையை
பொடியாக்கிப் பிளந்திடவும்


அன்னைதந்த வேல் விடுத்து
அரக்கர்குலம் அழித்தவனே!

"வெம் அரவு அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே"


கொடிய விஷம் கக்குவதால்
வெப்பப் பெருமூச்சினை நா வழியே
வீசுகின்ற ஆதிசேஷன் எனும்
பாம்பணையில் பள்ளி கொண்டு
பங்கயம் போலும் கண்மலர் கொண்ட
நாராயணனின் மருகோனே!


"மிடறு கரியர் குமர"

அமுதம் எடுக்க அசுரரும் தேவரும்
பாற்கடலைக் கடைந்த வேளை
வெப்பம் தாளாது வருந்திட்ட
வாசுகி எனும் பாம்பின் வாயினின்று
புறப்பட்ட கொடும் விஷமாம்
ஆலகாலத்தைத் தான் வாங்கி
தன் கண்டத்தில் வைத்ததினால்
"கரியர்" எனப் பெயர்பெற்ற
சிவனாரின் திருக்குமாரனே!


"பழநி விரவும் அமரர் பெருமாளே"

தேவர் குறை தீர்த்துநின்ற
பெருமைமிகு பழனியிலே
எழுந்தருள் செய்கின்ற பெருமை மிக்கவரே!


"திமிர உததி அனைய நரக செனனம்"
பிறவியும் கடலும் ஒன்றெனச் சொல்வார்
அறிந்தவர் அதனை ஆமென உணர்வார்


கருநீலம் கொண்ட கடல் இருளுற்று இருக்கும்
அறியாமை என்னும் இருள் பிறவியிலே உண்டு

அலைகள் கடலில் அடுக்கடுக்காய் வந்து ஓய்வதே இல்லை
ஆசை பாசம் என்னும் அலைகள் பிறவியில் என்றும் ஓய்வதும் இல்லை

மீனும், மலையும், திமிங்கிலமும் கடலில் வாழும் உயிர்வகைகள்
எண்ணம், பாவம், மதங்கள் என்னும் பல்வகை உணர்வுகள் பிறவியிலே

கரையின்றி நீண்டிருக்கும் கடல்நடுவே நின்றிருந்தால்
கரைகாணா நிலையென்றே பிறவியினைச் சொல்லிடுவார்

கடல் போலும் பிறவியினை தொல்லையெனச் சொல்லிடுவார்
நரகமென நலிந்திருக்கும் தொல்லைகளே இதிலுண்டு!


"அதனில் விடுவாயேல்"

இத்தனை தொல்லைகள் நிறைந்திட்ட
நரகவாழ்வு எனும் பிறவிப் பெருந்துயரில்
எனை ஆழ்த்திட நீ திருவருள் புரிகுவாயேல்

"செவிடு"

'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்'
என்கின்ற தமிழ்மறையின் வாக்கொப்ப,

கண் இல்லாவிடினும் உணர்ந்து தெரிந்திடலாம்
சுவையுணர்வு இல்லாவிடினும் விழுங்கி உயிர் வாழ்ந்திடலாம்
மணம் உணராவிடினினும் சுவையிருப்பின் பயனுண்டு
தொடுவுணர்வு இல்லையெனினும் செவி வழியே உணர்ந்திடலாம்

பிறந்தவுடன் பெயர் ஓதுவதும் செவியிலேயே
முதலாண்டு அணிகலனும் செவித் தோடே
'தோடுடைய செவியன்' என சிவனாரைப் புகழ்வதுவும் செவிவழியே
எழுத்தறிவு உணர்ந்திடும்முன் கேட்பதுவும் செவிவழியே
'ஓம்' என்னும் வரிவடிவில் அமைவதுவும் செவியேதான்
மரிக்கையிலே வழியனுப்ப மந்திரம் சொல்லுவதும் செவியிலேதான்
இத்தகைய செவியுணர்வு நன்கருளி செவிடில்லாமலும்,


"குருடு"

அருள்மேனி காண்பதற்கு அருளுவதுவும் கண் வழியே
திருவாளர் துணை காணத் தேவையிங்கு கண்கள் இங்கே
'கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க' எனக் கோதை
சொன்னதுவும் கண் குறித்தே என்பதினால் குருடில்லாமலும்,

"வடிவு குறைவு"
இறைவனாரை,
வாழ்த்துதற்கு வாய் வேண்டும்
வணங்குதற்குத் தலை வேண்டும்
அருச்சிக்கக் கைகள் வேண்டும்
வலம் வந்திடக் கால்கள் வேண்டும்
எனவே,
என் வடிவினில் எக்குறையும் இல்லாமல்
சுத்தமாகப் படைத்திடவும்,

"சிறிது மிடியும் அணுகாதே"
'கொடிது கொடிது வறுமை கொடிது' என்கின்ற
தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது போல்
வறுமை,
வனப்பை அழித்து உலர்த்தி வாட்டும்
உறவினிடை கலகத்தை உண்டாக்கும்
சோம்பல் மிக வளர்க்கும்
கஞ்சகுணம் மிகவாகும்
பொய், பேராசை, அவமானம் என்கின்ற
தீயவையை நம்முள் வளர்க்கும்
எனவே,
சிறிதளவும் வறுமையென ஒன்று என்னை
அணுக வேண்டியதே கூடாதென வேண்டுகின்றேன்


"அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவு நிறையும் வரவே"


மருவற்ற தேகமுடைய
தேவர்போலும் வடிவும்
நன்நெறியில் திகழ்கின்ற
மேன்மைக் குணங்கள்
நிறைந்திருக்கும் குலத்தினிலே
யான் பிறந்து நல்லறிவும்
நிறைவான குணங்களும்
எனக்கு வந்திடவே


"நின் அருள் அது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் வரவேணும்"


நினது திருவருளை எனக்கு மிகவருளி
என்னை மட்டுமல்லாமல் என் மனத்தினையும்
நீ அடிமை செய்து, நினது வசமாக்கி
தடுத்தாட்க்கொண்டிட வந்தருள வேண்டும்!
*************************************************


அருஞ்சொற் பொருள்

திமிரம் - இருள்
உததி - பெருங்கடல்
மிடி - தரித்திரம்
சமர முகம் - போர்க்களம்
சலதி - கடல்
பதலை - மலை
தகர - உடைய
அயில் - வேலாயுதம்
வெம் - வெப்பம்
அரவு - பாம்பு
அணை - மஞ்சம்
மிடறு - கண்டம், தொண்டை
மிடறு கரியர் - விடம் உண்டதால் கரிய தொண்டை உடைய சிவன்
விரவும் - எழுந்தருளியிருக்கும்
******************************************


வேலும் மயிலும் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*******************************

Friday, March 21, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

சமீபத்தில் சிவராத்திரி குறித்து ஒரு பதிவு, 'சிவமாய் நிறைவாய்' என எழுதினேன். அந்த சமயம் எனது இனிய நண்பர் திரு. குமரன் மூலம் ஒரு ஒளிப்படம் கிடைத்தது. இலங்கையில் இருக்கும் திருக்கோணமலையின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலயக் காட்சிகள் அடங்கிய தொகுப்பு அது. அதில் வந்த ஒரு காட்சி என் கருத்தில் பதிந்தது. அருணையார் எழுதிய திருப்புகழ் ஒன்று போர்டில் எழுதப்பட்டுப் பதிக்கப் பட்டிருந்தது. அந்த புகழ் என்ன எனப் பார்க்கும் ஆவலையும் தூண்டியது. மிக அற்புதமான பொருள் அடங்கிய பாடல் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்ற, எல்லாம் வல்ல முருகனை வேண்டிக் கேட்கும் பாடலை, பங்குனி உத்திர நன்நாளில் இங்கு இடுவதில் மகிழ்கிறேன். அனைவரும் ஓதி எண்ணியது எண்ணியாங்கு எய்த என் முருகனை இறைஞ்சுகிறேன்.
************** பாடல் **************

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே.
******************************************************************************************


சற்று பெரிய பாடல்! சந்தத்துக்காக சில குறில் நெடில் மாற்றங்கள் இப்பாடலில் வருவது ஒரு புதுமை!வழக்கம் போல பின் பார்த்து முன்![நீட்டி முழக்காமல்]!!

**************** பொருள் *****************

"மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே"



மலைக்கு நாயக! சிவகாமி நாயகர்
திருக்கு மாரனே! முகத்து ஆறு தேசிக!
வடிப்ப மாது ஒரு குறப்பாவையாள் மகிழ்தரு வேளே!

மலையிருக்குமிடமெல்லாம் தானிருக்கும்
இடமெனக் கொண்டு தலைவனாய்த் திகழ்பவரே!
சிவன் உமை எனும் பேரிறையின் செல்வக்குமரனே!
கண்ணினின்று பொறிவிட்டு ஆறு பாலனாய்
ஆற்றினில் தவழ்ந்து பொய்கையடைந்து
ஆறு மாதர் முலைப்பாலுண்டாலும்
மாறுபாகம் கொண்ட உமையவளின் அணைப்பினால்
ஆறுமுகமாய் ஆனவனே!
அழகினுக்கே அழகுசெய்யும் வள்ளிக்குறமாதின்
ஒப்பற்ற மனவழகும் பொருந்திய தன்மையில்
உள்ளம் பறிகொடுத்து உவப்பாய் விரும்பும் தலைவனே!


"வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே"



வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோலமாய் வரு முருகோனே

தவத்திரு யோகிகள் வசிட்டர், காசிபமுனிவர்,
பெருமைமிகு அகத்தியர்,, இடைக்காடர், நக்கீரர்
இவர் அனைவரும் இயற்றிய பாடல்களிலெல்லாம்
தனிப்பெரும் பொருளாக இருக்கும் முருகனே!

"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே"

நிலைக்கும் நான்மறை மகத்து ஆன பூசுரர்
திருக்கொணாமலை தலத்து ஆர் கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே!


என்றுமே நிலைத்து நிற்கின்ற நான்மறைகளை அன்புடன் ஓதிவரும்
பெருமைமிகு அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலை என்கின்ற
திருத்தலத்தில் ஓங்கிநிற்கும் கோபுர வாயிலினுள் அமைந்திருக்கும்
'கிளிப்பாடுபூதி' என்னும் நிலையினுள் எழுந்தருளி இருப்போனே!

" நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே."

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல்கொடு பொடி தூளது ஆ எறி
நினைத்த காரியம் அநுகூலமே புரி பெருமாளே.


பிறவிகள் ஏழென்று சொல்லிடுவார்
ஒவ்வொன்றும் ஓர் கடலென்றும் சொல்லிடுவார்
வேல் விடுத்து கடல் மாய்த்து
சூர் என்னும் அசுரனையும்
சூறையாடிக் கொன்ற வேலன்
பிறவிப் பெருங்கடலையினையும்
தூளாகிப் போகுமாறு செய்யவல்ல
பெருமைபெற்ற முருகோனே!
நீயென்றன் மனத்தினில் எண்ணிய
கருமங்கள் யாவினையும் நிறைவேற்றித்
தரவல்லவன் எனப் பணிகின்றேன்!


"விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி"

விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை
தரித்த ஆடையும் அணிப்பூணும் ஆகவே
மினுக்கு மாதர்கள் இடக்காமம் மூழ்கியே மயல் ஊறி


தன் உடலையே விலைக்கு விற்கின்ற விலைமாதர்கள்
அதனை மிகவும் அழகூட்டவென மாலைகளும்
மேகலைஎன்கின்ற இடுப்பிலணியும் ஆபரணமும்
அழகிய ஆடைகளும், இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களும்
அழகுற அணிந்து மினுக்குகின்ற அவரிடத்தே ஆசைவைத்து
காமமெனும் கடலினில் மூழ்கி அந்த மயக்கத்தில் மிகவுமே திளைத்து


"மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்"

மிகுத்த காமியன் என, பார் உளோர் எதிர்
நகைக்கவே, உடல் எடுத்தே, வியாகுல
வெறுப்பது ஆகியே, உழைத்தே விடாய்படு கொடியேனை


காமத்தில் மிகவுமே விருப்பமுள்ளவன் இவன் என
உலகத்தில் உள்ளோர் என்னைப் பார்த்து சிரிக்குமாறு
ஒரு உடலை எடுத்து, அதனால் துன்பமடைந்து
அந்த உடல் மீதே வெறுப்புற்று, மீண்டும் மீண்டும்
இந்த உலக வாழ்விலேயே உழன்று [காதல்]
தாகம் அடைகின்ற கொடியவனாகிய என்னை


"கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைஇத்தேற வேசெயு மொருவாழ்வே"

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு
பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொ[ல்]லி கடைத்தேறவே செ[ய்]யும் ஒரு வாழ்வே!

என்னறிவு கலக்கமுற்றுப் போகும்படி செய்து
ஒன்பது வகையான கூடுகள் வழியே
விளைகின்ற மலங்களை வெளிக்கிடும்
இந்த உடலாகிய கூட்டுடன் சேர்ந்து
பலவிதமான நோய்களுக்கு ஆளாகி
இவைகளினால் நான் தவிக்காமல்
உன்னுடைய புகழினைப் போற்றுகின்ற
தமிழ்க்கவிதைகளைச் சொல்லி
எனது ஆன்மா இவ்வுடற் கூட்டினின்று
கடைத்தேறும்படி செய்யவல்ல
நிகரற்ற வாழ்வாக அமைந்த பொருளே!

"கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்"

கதிக்கு நாதன் நீ உனைத் தேடியே புகழ்
உரைக்கும் நாயேனை அருட்பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும்!

என் ஜென்மம் கடைத்தேற இருக்கின்ற ஒரே தலைவன் நீயே!
நினைப் போற்றி புகழ் பாடுகின்ற நாய் போன்றவன் யான்!
நினது அருட்பார்வையை என்மீது செலுத்தி
நினது திருவடிகளில் என்னையும் ஏற்றுக்கொண்டு
இவ்வுலகிலேயே மிகவும் சிறந்ததான
தாயின் கருணையினை ஒத்த அருளை
எனக்கு நீ தந்தருளவேண்டும் முருகப்பெருமானே!
******************************************************


திருக்கோணமலை இலங்கையில் உள்ள ஒரு சிவத்தலம். தக்ஷிண கைலாயம் என வழங்கப்படும் மூன்று தலங்களில் ஒன்று. மற்ற இரு தலங்கள், திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி.
கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோபுரநிலையில் உள்ள ஓரிடத்தின் பெயர்.
**************************************************************


வேலும் மயிலும் வாழ்க !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க !!!
*******************************

Sunday, February 24, 2008

"அ.அ. திருப்புகழ்" 25 -- செகமாயையுற்று"

"அ.அ. திருப்புகழ்" 25 -- "செகமாயையுற்று"



இந்த வாரம் சுவாமிமலைத் திருப்புகழில் இருந்து ஒரு பாடல் போடலாம் என் எண்ணி புரட்டினேன். இந்தப் பாடல் கண்ணில் பட்டது. இதன் பொருள் என்னை ஒரு தனிப்பட்ட முறையில் கவர்ந்தது. நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத என் தோழி ஒருவருக்கு சென்ற ஆண்டு பாம்பன் சுவாமிகள் அருளிய "வேற்குழவி வேட்கை" எனும் பதிகத்தை தினந்தோறும் ஓதுமாறு ஆலோசனை சொல்லியிருந்தேன். இவர் ஒரு சில உடற்கோளாறுகளால் கருத்தரிக்க இயலாத நிலையில் இருந்தார். செயற்கை விந்துப் பரிமாற்றம் கூட இருமுறை பயனளிக்காமல் போயிற்று. நம்பிக்கையுடன் இதைப் படித்து வந்த இவர் இப்போது எட்டுமாத கர்ப்பிணி. அடுத்த மாதம் சீமந்தம். முருகப்பெருமானே தனக்குக் குழந்தையாக வர வேண்டும் என்ற பொருளில் அமைந்த இப்பாடலை என் தோழிக்குக் காணிக்கையாக்கி நல்ல முறையில் பிரசவம் நடந்தேற வேண்டி இங்கு அளிக்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!


********** பாடல் ***********

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்


தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி


மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி


மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா


தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே


தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே!
************************************************************


********* பொருள் *********
[பின் பார்த்து முன்!!]

"முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா"
["முகமாயம் இட்ட குறமாதினுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா"]

அழகினுக்கு ஒரு முகமென்றால் அது
கிழவனுக்கும் பழிப்பு காட்டிய முகமொன்றே!
வேடனாய் வந்தவனைப் பார்த்து ஒதுக்கியவள்
விருத்தனாய் வந்தவன் ஆனையை அழைத்திடினும்
வேலனை மனத்தினின்று விடாது நின்றவள்
தினைப்புனத்தைக் காக்கையிலும் திறனாக நின்றவள்
முகவழகு விஞ்சிய வள்ளிக் குறமாதிவள்!
கொண்டவொரு தவத்தினை விடாது கொண்டவள்
வடிவழகில் மயங்கிய வேலனும் மனமகிழ்ந்தான்
குறமாதின் தனங்களிலே தஞ்சம் அடைந்தான்!
யானெனும் செருக்கு அற்ற அடியவர்க்கு
அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!

"முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா"
[முதுமா மறைக்குள் ஒரு மாபொருட்கு
உள்மொழியே உரைத்த குருநாதா]


முன்னைப் பழைமக்கும் பழைமையான
எல்லாச் சிறப்பும் பொருந்தியதான
வேதமுரைக்கும் பல்வேறு பொருட்களுக்கும்
முந்தையப் பொருளான பிரணவத்தின்
உட்பொருளைத் தந்தைக்கே குருவாகி
எம்பிரான் வாய்புதைத்து கைகட்டி நிற்க
அரும்பொருள் அருளிய குருநாதா!


"தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே"
[தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே]


கோபுரத்தின் மீதிருந்து குதித்திட்ட அருணையாரை
தன்கைமீது தாங்கிவந்து உயிர்காத்து அருள்செய்து
'சொல்லற சும்மாயிரு'என உபதேசம் செய்தது அருணையிலே!
அருட்காட்சி தந்ததுவோ மயிலாடும் விராலிமலையில்!
தடையேதுமில்லாமல் நினது அருட்பாதம் தந்து
அன்புடனே உய்வித்ததுவோ ஏரகத்தில்!
தந்தைக்கு உபதேசித்த திருத்தலமாம் சுவாமிமலையில்
தனியாக அமர்ந்திருந்து அருள்சுரக்கும் முருகோனே!

"தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே"
[தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர் வேல் எடுத்த பெருமாளே]

என்றும் வற்றாது நீர் வழங்கும்
செல்லுமிடமெல்லாம் மரங்களை வளர்த்துவரும்
விரிவான கரையெடுத்து விரைவாக வருவதினால்
கா விரி 'காவிரி' எனும் தனித்தமிழ் பெயர்பெற்ற
ஆற்றின் வடகரையில் விளங்கியிருக்கும்
சுவாமிமலை எனும் திருத்தலத்தில் இருந்து
சூரனுடன் போர் முடிக்க திருவுளம் கொண்டு
சக்திவேல் ஆயுதம் எடுத்த பெருமைக்குரியவனே!


"செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்"
[செகமாயை உற்று என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறி]


உலகமாயையெனும் ஆளுகையில் அகப்பட்டு
காமவசப்பட்டு என் இல்லற வாழ்வில்
ஆசை மனைவிக்கு நான் அளித்த
கர்ப்பத்தினால் கருவொன்று அவள் உடலில் நிலைத்து


"தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி"
[தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி]


பத்துத் திங்கள் முடியும் போது
முத்துப் பிள்ளையாய் அழகுடனே
நித்திலமாம் இப்பூவுலகில் நன்கு
ஒரு உருவாய் நீ வந்து
அழகுடன் நீ தோன்றி


"மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி"
[மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி]


என் மகவு என்கின்ற ஆவல்
என்னுள் உந்திவர ஆசையுடன்
உனை உச்சி மோந்து
அன்புடன் கண்களில் ஒற்றியும்
ஆசை மிகவேறி அப்படியே அள்ளிக்கொண்டு
முகத்தோடு முகம் சேர்த்து மகிழ்ந்தும்
என் திரண்ட புயங்களில் நீ உறவுகொண்டும்


"மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்"
[மடி மீது அடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்]


என் மடி மேல் அமர்நது
என்னுடன் மிகவுமே விளையாடி
நாள்தோறும் நின்றன் மணிவாயினால்
எனக்கொரு முத்தம் கொடுத்து அருள்வாய் முருகா!
**************************************************


"சிவகுருவே! திருவேரகத் தேவே! நீ என் மகனாய் வந்து எனக்கொரு முத்தம் தர வேண்டும்!"
****************************************************************************************************

அருஞ்சொற்பொருள்::

தெச மாதம் = பத்து மாதம்
திரமாய் = திரம் ஆய் = நன்றாக
ஆநநம் = முகத்தோடு முகம்
முக மாயம் இட்ட = முக அழகு மிகவும் படைத்த
நீதா = நீதிபதி
முது மா மறை = பழைமையான வேதம்
ஒரு பொருட்கு உள் மொழி = எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமான பிரணவம்
தகையாது = தடை எதுவும் இல்லாமல்
ஏரகம் = சுவாமிமலை
பாரிசம் = புறம், பக்கம்
சமர் = போர்
***************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
*****************************

Monday, February 11, 2008

"அ.அ. திருப்புகழ்"[24] -- "அமைவுற்றடைய"

"அ.அ. திருப்புகழ்" [24] -- "அமைவுற்றடைய"


மயிலை மன்னார் ஐயனின் "நிலையாமை" பற்றி சொன்னதும், அதே நினைவுடன் திருப்புகழைப் புரட்டியபோது முதலில் வந்தது திருத்தணி மேவும் தணிகக்குமரனைப் போற்றும் இந்தப் பாடல்!

விரிவாகப் படித்ததும், இதுவும் அதே கருத்தைச் சொல்லியிருப்பதைப் பார்த்ததும், உடனே பதிகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**************************************


.........."பாடல்".........

"அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே

அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்

சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே

இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும்

சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
**************************************************


........"பொருள்" [பின் பார்த்து முன்!!].........

"இமயத்து மயிற்கு ஒருபக்கம்
அளித்தவருக்கு இசையப் புகல்வோனே"

பிருகுவென்னும் மாமுனிவர்
சிவனொன்றே திருவென நம்பி
திருவுருவாம் உமையவளை
இறையென்று மதியாமல்
சிவனாரை மட்டுமே
வலம்வந்தார் கயிலையில்!


இடம் நீங்கி உமையவளும்
காஞ்சியெனும் திருநகரில்
நால்வேதப் பொருளான
மாவடியில் தவமிருந்து
மணல்வடிவில் உருவமைத்து
சிவனாரை எண்ணியே
தவமிருக்க மறையோனும்
உமையவளை மணமுடித்து
இடப்பாகம் தந்திட்டான்!

பிரணவத்தின் பொருளறியா
நான்முகனின் தலைகுட்டிச்
சிறையிட்ட முருகோனை
வேண்டிட்ட சிவனார்க்கு
குருவாகி இசைவாகப்
பொருள் சொன்னவரே!


"இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு
இரையிட்டிடு விக்ரமவேலா"

போர்புரிய வந்திருந்து
எதிர்நின்று தாக்கவரும்
மதியற்ற வீரர்களைக்
கொன்றங்கு கழுகுக்கு
இரையாக அளிக்கின்ற
வீரமுடைய வேலென்னும்
ஆயுதத்தைத் தாங்கிநிற்கும்
வேலாயுதரே!

"சமயச் சிலுகிட்டவரைத் தவறித்
தவமுற்ற அருள் புகநாடும்"
எங்கிருந்து பிறந்தாலும்
எவ்வழியில் சென்றாலும்
நதியெல்லாம் வழியோடி
இறுதியிலே அடையுமிடம்
கடல்மடியே என்பது போல்
எவர்மூலம் தோன்றிடினும்
எவருரையால் வளர்ந்திடினும்
சமயங்கள் ஒவ்வொன்றும்
சென்றடையும் முடிவிடமோ
இறைவனது திருவடிகள்!

இதையுணரா வீணர்சிலர்
சமயத்தை முன்னிறுத்தி
வாதங்கள் செய்வதுவும்
வீண்சண்டை புரிவதுவும்!

பயனில்லாச் செயலென்று
அவ்வழியை விலக்கிவிட்டு,
நினைநாடி யான்செய்யும்
தவமொன்று நிறைவாகி
நின் திருவருளில் இனிதாக
யான் புகவும் விரும்புகின்ற,


"சடு பத்ம முக! குக! புக்க கனத்
தணியில் குமரப் பெருமாளே!"


தாமரைபோல் மலர்ந்திருக்கும்
ஆறுமுகம் திருவுருவாய்க்
கொண்டிருக்கும் ஷண்முகரே!

உள்ளமெனும் குகையினிலே
அருளொளியைப் பரப்புபவரே!


குறவள்ளி தனைமணந்து
வருவோரின் வினை தணிக்கும்
தணியென்னும் மலைசேர்ந்து
பெருமையுடன் வீற்றிருக்கும்
தணிகைக் குமார மூர்த்தியே!

பெருமையுடையவரே!


"அமைவுற்று அடையப் பசியுற்றவருக்கு
அமுதைப் பகிர்தற்கு இசையாதே"
["அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு கிசையாதே" ]

பசியால் மிகவாடி வாசல் நின்று
உண்ணுதற்கு ஏதேனும் தருகவென
இரந்து நிற்போரைக் கண்டு மனமிரங்கி
இருப்பதை அவருடன் மனவமைதியுடன்
பகிர்ந்துண்டு வாழும் மனமின்றி,

"அடையப் பொருள் கைக்கு இளமைக்கென வைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"
["அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"]

இருக்கின்ற பொருள்யாவும்
இருக்கின்ற இளமையினைத்
தக்கவைத்துக் கொள்ளும்
தகமைக்கே வாய்த்ததென
தனக்குள்ளே நினைத்திருந்து
எவருக்கும் கொடுக்காமல்
நல்லோர் சொன்ன நன்னெறியை
நினைவினிலும் கொள்ளாமல்
அதைவிட்டு அகன்றிருந்து
அகங்காரமென்னும் பெருநோயால்
தளர்ச்சி அடையாமலும்,

"தமர் சுற்றி அழப் பறைகொட்டி இடச்
சமன் நெட்டு உயிரைக் கொடுபோகும்"


உடனிருக்கும் சுற்றத்தாரும்
ஓவெனவே அலறியழவும்
பறைமேள வாத்தியங்கள்
'டமடம'வென முழங்கிடவும்
அரசனிவன் ஆண்டியிவன்
படித்தவன் மூடனிவன்
பணக்காரன் ஏழையிவன்
சற்றுமுன்னரே மணமுடித்த
மாப்பிள்ளையிவன் என்கின்ற
பேதங்கள் ஏதுமின்றி
சமனாக அனைவரையும்
கொண்டு செல்கின்ற தன்மையினால்
"சமன்" என்ற பெயர் படைத்த
கொடுங்கூற்று இயமனும்
இவ்வுயிரைப் பற்றி
நெடுந்தொலைவு கொண்டுபோகின்ற,


"சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்
தளர்வுற்று ஒழியக் கடவேனோ"

இளமையானவொரு கணவன்
அழகான அவன் மனைவி
அடை செய்து கொண்டுவாவென
அன்பான கணவன் கேட்க
அரிசியினை ஊறவைத்து
அன்புமனைவியும் அடைசெய்து
வட்டிலிலிட்டு பரிமாறிட
ஆவலுடன் அதையுண்டவன்
இடப்பக்கம் வலிப்பதாகச்
சொல்லிச் சற்றுப் படுத்தான்!
படுத்தவன் மீண்டும் எழவேயில்லை!
இதுவே இவ்வுலக வாழ்வு!

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே" [திருமந்திரம்] [148]
[திருத்தத்துக்கு நன்றி, திரு. திவா!]
இதுவொன்றே உண்மையென
ஒருபோதும் அறியாது
நிலையற்ற இவ்வுடலை
என்றுமே நிலைத்திருக்கும்
எனக்கருதி இதை வளர்த்து
இதற்கெனவே பாடுபட்டுத்
தளர்ந்திங்கு யான் அழிவது
இது முறையாமோ?

[முறையில்லை! நிலையாமையை உணர்ந்து நிலை பெற அருள் முருகா!]
*******************************************************************************

"அருஞ்சொற்பொருள்"

தமர் = தம் மக்கள், சுற்றத்தார்
சமன் = அனைவரையும் சமமாகக் கொண்டு செல்லும் இயமன்
இரணம் = போர்
எற்றுவர் = தாக்கி எதிர்ப்பவர்
சிலுகை = சண்டை
சடு = 'ஷட்' என்னும் வடமொழியைத் தமிழாக்கி ஆறு[6] எனும் பொருள்
************************************************************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!!
முருகனருள் முன்னிற்கும்!!!
******************************************

Monday, December 03, 2007

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"

திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த "கேயாரெஸ்ஸுக்கு" எனது மனமார்ந்த நன்றி!

இப்போது பாடலைப் பார்ப்போம்!
******************************************


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே!
**************************************************************

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!


************************************************************



பொருள்:
[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து
பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த
தாருகவனத்தின் முனிவர்கூட்டச்
செருக்கினை அடக்க சிவபெருமானும்
அழகியவுருவில் அவர்முன் நடக்க

மையலில் மயங்கி முனிவர் பெண்டிர்
அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க
ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை

அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த
பிரமனை அழைத்து மூலப்பொருளாம்
பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன்
தலையினில் குட்டி சிறையினில் தள்ளி

சிருட்டித்தொழிலைத் தானே செய்து
கந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில்,
கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து
பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திரும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து

கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி

ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற
ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி

மூலப்பொருளின் பொருளுரை கேட்டார்
ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்
சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்
எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,

"மதிபாளா"

ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன்
சூரன் என்பான் சிவனை வணங்கிப்
பலவரம் பெற்று தம்பியர் துணையுடன்
தேவர் மானிடர் முனிவரை வருத்தி
ஆட்சி செய்யும் வேளைதன்னில்,

முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க
ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி
ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க
அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து
தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை
அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்
மாமரமாகி சூரன் நின்றனன்

மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க
அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து
வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து,
ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து
தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த
மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க

"அதிதீரா"

வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும்
பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்
இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து
மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி
எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன்
முனிவருமிவனது கணை பிழையாரே
தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார்
பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்!
அவனே அழகிய மன்மதன் என்பான்!

அவனது கையில் வில்லொன்றுண்டு
அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!

சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்

இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி
மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்
வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட
மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால்
வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட
நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற"

வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்
மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி
வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்
ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே
உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ!
பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா!
ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய
மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல
ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில்
நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து
என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

******************************************************


அருஞ்சொற்பொருள்:

விறல்மாரன்= மன்மதன்
வாளி= அம்பு, கணை
இந்து= நிலவு
தந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]
மறிமான்= சிறிய மான்
மதிபாளா= ஞானம் மிகுந்தவர்
வேலை= கடல்
அலைவாய்= திருச்செந்தூர்
***********************************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***********************************************

Wednesday, July 18, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி"

"பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள்" திருமாலின் ஒரு பெயர் கொண்ட அன்பர், முருகனடியார் திரு ஜி.ராகவன் கேட்ட இப்பாடல் சந்தம் மிகுந்தது.

சொல்லினிமை, பொருளினிமை கொண்டது.

பாடுதற்கு இனியது.

முருகனை, கந்தக்கடம்பனை 'நமோநம' எனத் துதித்து அருச்சிப்பது.

திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகனைப் போற்றும் இப்பாடலை இங்கு இடுவதில் மகிழ்கிறேன்.

பாடல் பெரிது!

பொருளும்
சற்று விரிவாகத்தான் இட்டிருக்கிறேன்.


அனைவரும் பொறுத்தருள்க!

ஜி.ரா.வுக்கு என் நன்றி!!

முருகனருள் எல்லார்க்கும்
முன்னிற்கட்டும்!

**********************************************************

ராகம் -- ஸிந்துபைரவி
தாளம் -- சதுஸ்ரத்ருவம்.. கண்டநடை

"தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன .... தனதான

............பாடல்................

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய .........விடுமாதர்

சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ....... னுழலாமற்

சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசிவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ........ புரிவாயே

சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ......... விருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே

இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ....... மணிமார்பா

எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் .....பெருமாளே.


...........பொருள்.............

[பின் பார்த்து முன் பார்க்கலாம்.]

இப்பாடலின் சிறப்பு கந்தனைத் தோத்தரிப்பதில் இருந்து துவங்குகிறது.

சிங்கார ரூபமயில் வாகன நமோ நம என

அழகென்னும் பெயருக்கு அரும்பொருளே
நீதான் என அகில உலகமும் போற்றிடவே
அழகின் அழகாய் உருவெடுத்து,

அகிலமெலாம் காப்பதற்கு
அழகிய மயிலின் மீதேறி வந்து
நிற்கும் அழகே போற்றி, போற்றி! எனவும்

கந்தா குமார சிவதேசிக நமோ நம என

எதிர்த்துவரும் பகையாற்றலை
வற்றச் செய்பவன் கந்தன்
ஆறுதிருமேனியும் ஒன்றாய்ப்
பொருந்தி நிற்பவன் கந்தன்
சுழன்றலையும் ஆன்மாவிற்குப்
பற்றுகோடாய் இருப்பவன் கந்தன்

அம்மைக்கும் குமரனிவன்
அப்பனுக்கும் குமரனிவன்
அம்மையப்பருக்கும் குமரனிவன்
இம்மைக்கும் மறுமைக்கும் குமரனிவன்

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
அவ்வைக்கும் அருளுரைத்த பாலன்
அருணைக்கும் பம்பனுக்கும் ஆசான்
அவனே நமக்கெல்லாம் குருநாதன்

கந்தனாய்,குமரனாய்,சிவகுரு
தேசிகனாய் எமக்கெல்லாம்
அருள்பவனே போற்றி, போற்றி!எனவும்


சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என

குங்குமம் போலும் சிவந்த மேனியள்
குங்குமம் நிறை நெற்றியை உடையவள்
சிந்தூரத்தின் சொந்தக்காரன்
திருமாலின் அன்புத்தங்கை
பார்வதியெனும் பெயர் கொண்டவள்
பாரினை ஆளும் பரம்பொருள் சக்தி
பாரின் துயர் துடைக்க
சூரன் உடல் கிழிக்க
பார்புகழும் மகவெடுத்து
மாரினில் வைத்துக் கொஞ்சிய
பார்வதியாள் புத்திரனே
போற்றீ, போற்றி! எனவும்,



விருது ஓதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நம என

கொன்றவர் ஆயிரமாயிரம் - ஒளிந்து
நின்றவர் ஆயிரமாயிரம் - அவர் பின்னே
சென்றது கந்தனின் கதிர்வேல் - அசுரர்களைக்
கொன்றது கடம்பனின் வீரவேல் -பகைமுடித்து
வென்றவர் ஆயிரமாயிரம் - அவரெல்லாம்
வெற்றிவேல்! வீரவேல் என - செய்திட்ட
சங்கெடுத்து ஆர்ப்பரித்த வீரமுழக்கம் - கடலோசை
தோற்றிடச் செய்திட அவ்வேளை - அவர்நடுவே
சுட்டெரிக்கும் சோதிவடிவாய் - வேலெடுத்து
நின்றிட்ட வேலவனே போற்றி, போற்றி - எனவும்



கங்காள வேணி குருவானவ நமோ நம என

நடுநிசியில் சுடலைதனில்
நெடுமுடியும், எலும்புமாலைகளும்
கிடுகிடென்ன அசைந்துவர
நடனமிடும் சிவனாரின்
குருநாதன் ஆனவனே
பிரணவப் பொருளோனே
போற்றி, போற்றி எனவும்


பலவாறு உனைத் துதித்து முழங்கிடவும்,

திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலை விடு முருகோனே

கொடுமைபல செய்திட்ட சூரனையும்
அடி முதல் நுனிவரை அவன்தம் அசுரரையும்
மற்றுமாங்கு நெடுங்கடலையும்,
கிரவுஞ்ச மலைதனையும்
பொடிப்பொடியாய்ச் செய்திடவே
கூரிய வேல் செலுத்தி, தேவர்
குலம் காத்த முருகப் பெருமானே!


இங்கீத வேதபிரமாவை விழ மோதி

ஓதுதற்கும், பாடுதற்கும்,
படிப்பதற்கும் இனிமையான
வேதங்களைப் பயின்ற
பிரமனுக்கு அறிவுறுத்த
பிரணவப்பொருள் கேட்டு
அதுவறியா நான்முகனின்
தலையினில்குட்டி, எட்டியுதைத்து
மோதிக் கீழே விழுமாறுசெய்தும்,



ஒரு பெண் காதலோடு வனம் ஏவி வளி நாயகியை
இன்பான தேனிரச மார்முலை விடாத கர மணிமார்பா


இச்சாசக்தியாம் வள்ளியின் மேலே
தாளாத மையல் கொண்டு
காதலாகிக் காடு புகுந்து
அவரை ஆட்கொண்டு தேன்போலும்
இன்பம்நிறை முலைகளைப்பற்றி
அதனை விட்டகலா கரமும்
அணைக்கத்தக்க அழகிய
மார்பினையும் கொண்டவனே!


எண் தோளர் காதல்கொடு காதல்கறியே பருகு

சிறுத்தொண்டரெனும் சிவபக்தர்
என்றும் மாறா அவர் அன்பினைச்
உலகுக்குக் காட்டச் சோதிக்க வேண்டி,
எட்டுத்தோள் உடைய சிவனாரும்
சிவனடியார் வேடம் பூண்டு அவர்தம்
வீடடைந்து, அமுது கேட்க,
சிறுத்தொண்டரும் அகமகிழ்ந்து
அடியார் வேண்டுவதெதுவென வினவ
"பிள்ளைக்கறி பருக உத்தேசம்" என
அடியரும் பகர, "அப்படியே ஆகுக" என
தொண்டரும் தன் மகனாம் சீராளனை
அழைத்து,'புண்ணியம் பெற்றோம் நாமெல்லாம்!
என் தலைமகனே! அடியார்க்கு உன்னை
அமுது படைக்கப் போகிறேன்' எனச் சொல்ல,
மகிழ்வுடன் மகனும் இசைய,
அவ்வண்ணமே மகனை வெட்டிக் கறி சமைத்து
அடியார்க்கு அமுதுபடைக்க, அடியாரும்
தன் வேடம் களைந்து தரிசனம் அளித்து
சிறுத்தொண்டரின் சீரான பக்தியை
உலகுக்குக் காட்டி, அனைவரையும் வாழ்த்திய


செங்கோடு மேவி பிரகாசமயில் மேல் அழகொடு

பெருமை பெற்ற திருத்தலமாம்
திருச்செங்காட்டுக்குடி அடைந்து
ஒளிவீசும் அழகிய மயில் மீதமர்ந்து


என் காதல் மாலை முடி ஆறுமுக வா அமரர் பெருமாளே.

நின்மீது யான் கொண்ட அன்பினால்
ஆசையுடன் புனைந்திட்டத் தமிழ் மாலையினை
கருணைமிகக்கொண்டு சூடிடும்
ஆறுமுகக் கடவுளே! தேவர் தலைவனே!


வங்கார மார்பில் அணி தாரொடு உயர் கோடு அசைய

அழகிய மார்பினில் அணிந்திருக்கும்
பொன்மாலையுடன் பாரத்துடன்
உயர்ந்து நிற்கும் மார்பகங்களும்
சேர்ந்து அழகுடன் அசைந்திட


கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள

இத்தனையும் போதாதென வளமாக
நீண்டு வளர்ந்த கூந்தலும், அதில் சூடிய
மலர்க்கொத்துகள் நிறைந்த மாலையும்
மணிமாலையும் தோள்களில் புரள


வண்காதில் ஓலை கதிர் போல ஒளி வீச

வளைந்த அழகுடன் விளங்கும்
காதுகளில் பூட்டியிருக்கும்
காதணிகள் கதிரவன் போல் ஒளிவீச



இதழ் மலர் போல

அன்பு ததும்பிடும் மலர் உதடுகள்
மொட்டவிழ்ந்த மலர் போல் விரிய


மஞ்சு ஆடு சாபநுதல்

மேகக்கூட்டத்தின் நடுவில் வளைவாகத்
தோன்றிநிற்கும் வானவில் போல
அழகிய புருவங்களுக்கும் கூந்தலுக்கும்
இடையினில் வளைவாகத் தோன்றிடும்
சீரான அழகிய நெற்றியும்


வாள் அனைய வேல்விழிகள்

கூரான வாளையும் வேலையும்
பழித்திடும் வேல் விழிகளும்


கொஞ்சார மோககிளியாக நகை பேசி

கொஞ்சிடும் கிளி போலும்
ஆசைமொழிகள் பல பேசி


உற வந்தாரை வாரும் இரு[ம்]நீர் உறவென

அருகினில் வருவோர் அனைவரையும்
வருகவென வரவேற்று இருக்க வைத்து
'நீர் எமக்கு உறவினர் அல்லவோ' என்றெல்லாம்


ஆசைமயல் இடு மாதர்

பசப்பு வார்த்தைகள் பலவும் பேசி
நெஞ்சில் மயக்கம் உண்டுபண்ணும்
பொல்லாத விலைமாதர்கள்


சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர்

காரியம் ஆகவேண்டிக் கூட இருந்து
களித்து நிற்கும் பொய்யர்கள்
சூதாடலே தொழிலாய்க் கொண்டவர்
கொலைபாதகம் செய்யும் கொடியவர்
அடுத்துக் கெடுக்கும் குடிகேடர்கள்



சுழல் சிங்காரதோளர் பணஆசையுளர் சாதியிலர் சண்டாளர்

வேலையின்றி வீணே சுற்றித் திரிபவர்கள்
சிங்காரமாய் தோளில் துண்டணிந்து
ஆடம்பரமாய்த் திரிபவர்கள்
பணத்தாசை கொண்டு பாவம் செய்பவர்
அது ஒன்றுமட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு
எல்ல சாதியினருடனும் கூடுபவர்
இவைஅத்தனையும் செய்யும் இழிந்த குலத்தவர்



சீசியவர் மாயவலையோடு அடியென் உழலாமல்

இவர்கள் அனைவரையும் சிறுமையென ஒதுக்கி
சீ, சீ, என விலக்கி அவர் வலையில் சிக்காமல்
என் வாழ்வு இவர்களால் குலையாவண்ணம்

சங்கோதை நாதமொடு கூடி

மோகத்தில் மூழ்காமல்
யோகத்தில் எனை ஆழ்த்தி
அவ்வழியில் யோகியர் உணர்ந்திடும்
கிண்கிணி, சிலம்பு, மணி,
சங்கம், யாழ், தாளம்,
வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,
முகில்
என்னும் பத்துவகை
ஓசைகளும் நான் கேட்டு
அனுபவித்து, அதில் கலந்து,


வெகு மாயை இருள் வெந்து ஓட

மாயையென்னும் கொடிய இருள்
எனைத் தீண்டாமல் வெந்து
அழிந்து வெருண்டோட


மூலஅழல் வீசி உபதேசமது தண்காதில் ஓதி
நாத ஒலியால் நிறைந்து நின்று
மாயையெல்லாம் கழிந்த எனக்கு
யோகத்தால் மூலாதாரத்தினின்று
ஒரு பிழம்பு எழுந்து என்னுள் ஏற
அவ்வேளை, என் காது குளிரும்படி,
உன்னருள் உபதேச மந்திரத்தை
உணரும்படி சொல்லி


இரு பாதமலர் சேர அருள் புரிவாயே

அது கேட்டு, விம்மி விதிர்த்து
உள்ளமெல்லாம் உருகி
உன்னிரு தாளில் யான் சேரும்
உன் திருவருளைத் தரவேண்டும்
அருளைத் தந்தருள்க!
********************************************


அருஞ்சொற்பொருள் [இதுவும் நிறையவே!!]

வங்காரம் = பொன்மாலை [பங்காரம் என்பதறிக!]
தார் = மாலை
கோடு = மார்பகம்
கொந்தாரம் = கொத்து மலர்களாலான மாலை
ஆரம் = மாலை
ஓலை = காதணி
மஞ்சு = மேகம்
சாபம் = [வான]வில்
நுதல் = நெற்றி
கொஞ்சார = கொஞ்சுதல் மிக்க
சங்காளர் = கூடிக் களிப்பவர்கள்
சங்கோதை = யோகவழியில் உணரும் ஒலிகள்
நாதம் = பத்து [வித ஒலிகள்][பொருள் விளக்கத்தில் காண்க!]
அழல் = நெருப்பு
தண் = குளிர்ந்த
சிந்தூரம் = குங்குமம், சிவந்த
சுதாகர = பிள்ளை
விருது ஓதை = வெற்றிச் சின்னங்களின் ஓசை
ஓதை = ஒலி, ஓசை
சிந்து = கடல்
கங்காளன் = எலும்பு மாலை அணிந்தவன், சிவன்
வேணி = ஜடாமுடி அணிந்தவர், சிவன்
திண் = வலிமை
ஆழி = கடல்
இங்கீத = இனிமையான இசை
வளி = வள்ளி [சந்தத்திற்காக வளி என ஆனது!]
எண்தோளர் = எட்டுத்தோள்களை உடைய சிவன்
*********************************************


வேலும் மயிலும் துணை !

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!
*************************************************


Friday, June 29, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும் தொண்டர்" "என்னரும் நண்பர் " திரு.ரவி கண்ணபிரான்" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட பாடலை இங்கு இடுவதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
***************************************************************************************
------------- பாடல் ------------------

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

*************************************************
................பொருள்...................
[பின் பார்த்து முன்]
"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"



கொடுஞ்சூரன் கெடுமதியால்

மதிகெட்டு மனமயங்கி

அடுசெயலால் ஆதியாம்

பிரமன்முதல் அமரர்யாவரையும்

கொடுஞ்சிறை அடைத்து

சுடுமொழி பேசி இழித்து

கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து

மிகவும் வாட்டி உடல் வருத்தி

நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி

வருந்திடும் துயர் மாற்ற

திருவுளம் கொண்டு வேற்படையேந்தி

தேவர்தம் சிறை மீட்க

"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"

பொன்மலையாம் மேருவிற்கு

நிகரான ஆடுகின்ற

பொன்மயிலின் மீதமர்ந்து

சூரனுடன் போர் புரிந்து

விண்ணவரைச் சிறைமீட்டு

அமரர் புடை சூழ

மண்ணதிர விண்ணதிர

என்னவரும் மனமகிழ

தும்பிக்கையான் தம்பியும்

மயில்மீதில் அமர்ந்துவர



"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"


மாமரங்கள் அடர்ந்திருக்கும்

சோலைவனம் சூழ்ந்திருக்கும்

சுவாமிமலை தனில் வாழும்

என் குருநாதனே!

"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."

மாயப்போர் புரிந்து

நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட

சூரனை வெளிக்கொணர

வேலெடுத்து வீசிக்காட்டி

கடல் வற்றச் செய்து

சூரன் உடல் இருகூறுபட

அசுரனைப் பிளந்து

அருளுடன் ஆட்கொண்ட

பெருமைமிகு வேலவனே!



"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"


தான் பெற்ற மகளிரை

மணம் கொண்ட சந்திரன்

ரோஹிணியை மட்டும்

தன்னோடு சேர்த்து

மற்றவரைத் தள்ளியதால்

மனம் கொதித்த தந்தையாம்

தக்கன் அளித்த சாபத்தால்

ஒளிகுன்றி, மதி குன்றி

நிலவனும் தான் தேய

வேறெங்கும் அலைந்தும்

வழிகாணா மனத்தினனாய்

கருணைக்கடலாம் சிவனைநாட

குற்றம் தள்ளி குணம் நாடும்

காருண்ய மூர்த்தியும்

குறைமதியைப் பிறைநுதலாய்

தன்தலையில் சூடிக் காத்த,

தேவலோகம் விட்டுச்செல்லும்

தாபத்தால் கோபம்கொண்டு

உலகினை அழிக்க உக்கிரமாய்ச்

சீறிப் புறப்பட்ட கங்கையவள்

செருக்கடக்க, உலகுய்ய

கருணைத்திருவுளம் கொண்டு

தன்சடையில் தான் தாங்கி

தணிவோடு தண்ணீர்தந்த,


அன்புருவாம் சிவனாரின்

திருநுதற்கண்ணினின்று

உலகோரின் துயர்துடைக்க

தேவர்களைக் காத்திடவே

ஈசனே தன்னைத் தானளித்த

சங்கரன்குமாரனே! குமரேசனே!



"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"

குறமகள் வள்ளியைக்

கடிமணம் புரியத்


திருவுளம் கொண்டு


அவருடன் விளையாட,


வேங்கை மரமாய்

வேடனாய், விருத்தனாய்

வம்புகள் பலசெய்து

வள்ளியின் கோபம் தூண்டி

அவர்தம் கனிமொழிகேட்க

கைகால்களைப் பிடித்து

கெஞ்சிக் கொஞ்சிய

அழகிய மணவாளனே!



"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"

கானகம் சென்றிட்ட இராமன்

ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்

மடிமீது தலைவைத்து துயிலுகையில்

சீதையைக் கண்டு மோகித்து

இந்திரன் மகனாம் சயந்தனென்பான்

காகம் வடிவெடுத்து காரிகையின்

தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க

இராமனின் முகத்தில் அது பட்டு,

கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க

காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட

கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து

"காதும்" கொல்லுக இதனையென

காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட

காகமதும் கடிவேகம் கொண்டு

மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்

சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,

'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!

குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க

சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,

'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல

பிறன்மனை நோக்கிய குற்றத்தால்

ஒரு கண்ணை பாணம் துளைக்கும்

உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'

எனவருளிய மாயனின் மருகோனே!


"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"
தக்கன் சாபம் துரத்திய

சந்திரனைப் போலவும்


பிரம்மாஸ்திரம் துரத்திய

காகம் போலவும்

காலன் எனைத் துரத்தும்

கோலம் கண்டிங்கு

கருணை என்மீது கொண்டு

கங்கையைத் தலைமேல்

கொண்டது போலவே

பிறைதனை நுதல்மேல்

அணிந்தது போலவே

காகத்துக்கும் கருணை

காட்டியது போலவே

என்னையும் உன்னிருகாலில்

சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************

....அருஞ்சொற்பொருள்.......

காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய

***********************************************
வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Wednesday, May 23, 2007

அ.அ.திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப்படிந்து மடியாதே


ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

*************************************************************

இன்று சுவாமிமலை முருகனைப் போற்றி ஒரு எளிய, சிறிய பாடல்.

இதையும், வழக்கம் போல், பின் பார்த்து முன் பார்க்கலாம்.

"தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா"
மண்ணுலகில் உயிர்கள் இன்பமுற
மணம் கமழும் புகை சூழ்ந்த
விண்ணுலகினின்று இறங்குவது
விண்ணவரின் நல்லியல்பு

என்றோ எப்போதோ எவருக்கோ வந்திடாமல்
மன்றாடி அழைத்திடும் அடியார்க்கிரங்கி
மயிலேறி பறந்து நாடோறும் வருகுதலால்
நறுமணப்புகைமணம் எப்போதும் கமகமக்கும்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்
குழந்தையின் வடிவிலே குறைதீர்ப்பான்
நண்பனாய் வந்தே நல்லுறவு காட்டுவான்
சுகமான லீலைசெய்து சுகம் சேர்ப்பான்


"சூரனைக் கடிந்த கதிர்வேலா"

நல்லறம் மறந்து அல்லறம் புரிந்து
பொல்லாதன பலவால் பிறர் வாட
வல்லசுரர் துணைகொண்டு தீது செய்த
பொல்லாச் சூரனை இரு கூறாக
வேலாயுதத்தால் பிளந்திட்ட வேலவனே!


"ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"
பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்

மலைகளில் உயர்ந்தது மேருமலை
முருகனின் மயிலும் அதனை ஒக்கும்.

தங்கமாமலைமயில் மீதமர்ந்து
பொங்கிவரும் அழகோடு
வீரம் நிறைந்து நிற்கும்
மயில் வாகனனே!

"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"

அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!

"காமியத்து அழுந்தி இளையாதே"

அன்பின் வழியவன் இறைவன்
அனைத்தும் தருபவன் அவனே

கேட்டதைக் கொடுப்பவன் அவன்
கேட்கும் வகையினை யாரறிவார்?

பொன் வேண்டும் பொருள் வேண்டும்
மண் வேண்டும் மனை வேண்டுமென

நிலையில்லா பலவும் கேட்டு
நிலையான அவனருள் மறக்கின்றோம்

மாமரத்து விதையிடுதல்
மாம்பழம் வேண்டியன்றோ?

மாவிலைக்கும் மரக்குச்சிக்கும்
மரம் வளர்த்தல் முறையாமோ?

பழம் வேண்டிப் பயிரிட்டால்
பிறயாவும் தானே வருமன்றோ?

இறையருள்நாடி அவன் புகழ்பாடு
பிறநலன் யாவும் பொருந்திவரும்.

பயன்வேண்டிச் செய்திடும்
கிரியைகளில் என் மனம்

ஆழ்ந்திங்கு இளைக்காமல்,

"காலர் கைப்படிந்து மடியாதே"

தன்னலமில்லா தொண்டு செய்யின்
தென்னவனும் தொடமாட்டான்
எமதூதர் தொல்லையில்லை

என்கின்ற உண்மைதனை உணராமல்
என் நலன் மட்டுமே நாடி நின்று
வீணே யான் இறக்காமல்,

"ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"

ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
ஓமென்னும் ஓரெழுத்தில்


"ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த" பெருமான்

உறைந்திருக்கும் படைவீடு
ஏரகத்தில் எம்பெருமான்

ஓரெழுத்தின் பொருளுரைக்க
விடையேறு நம்பெருமான்

பணிந்து நின்று கேட்டனன்
அன்பு கொண்டு தியானித்து

மனம் முழுதும் அதில் திளைத்து
ஓவியம்போல் அசைவற்று

முடிவென்னும் அந்தத்தில்
மோனத்தில் நான் மூழ்க

மனமிரங்கி அருளவேண்டும்.
*******************************************

அருஞ்சொற்பொருள்:

காமியம் = பயன் கருதிச் செய்யும் பூஜை, யாகம் பக்தி முதலியன.
காலர் = எமதூதர்
அந்தம் = முடிவு, இறுதி நிலை
தூமம் = நறும்புகை
கடிந்த = தண்டித்த
ஏமம் = பொன், ஹேமம்
வெற்பு = மலை
ஏரகம் = சுவாமிமலையின் மற்றொரு பெயர்

*******************************************************
வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Thursday, May 03, 2007

ஜி.ரா. கேட்ட "அ.அ. திருப்புகழ்" -- 19 "பரவு நெடுங்கதிர்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 "பரவு நெடுங்கதிர்"[ஜி.ரா. கேட்டது!]

தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ..... தனந்தான

......பாடல்.......

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ..... யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது .... நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ..... மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ..... மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட .... மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ..... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ..... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ... பெருமாளே.

.....பொருள்......

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம்.]


"அரஹர சுந்தர அறுமுக என்று உனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே"

அரனின் மகனே! அழகனே! ஆறுமுகப் பெருமானே
என்றுன்னை அனுதினமும் மனத்தில் கொண்டு
அயராமல் தியானிக்கும் அடியவர் திறம் கண்டு
அகமெலாம் குளிர மகிழ்ச்சி கொள்வோனே!

"அசல நெடுங்கொடி அமையும் உமைதன் சுத
குறமகள் இங்கித மணவாளா"

மலையரசன் மகளாகப் பிறந்திவ்வுலகினில்
அரனையே மணவாளனாக மனம் நிறைத்து
அவனையே நினைத்து தவம் செய்து
தன்னுடல் இளைத்துக் கொடிபோலாகி
அண்டவரும் விண்டவரும் 'இளைத்ததால்
இவள் பெருமை மிகு கொடியே' எனும்
அபர்ணாவெனும் பெயர் பெற்ற உமையவளின்
கருணையினால் வந்துதித்த பேராளனே
தினைப்புனமாம் தோட்டத்தில் கவண் வீசிக்
கல்லெறிந்து கவனமாய்க் காத்திட்ட
வள்ளியின் மனமறிந்து அவளை ஆட்கொள்ள
பலவேடம் தாங்கிப் பதமாக வந்தங்கு
அவள்மனம் கவர்ந்திட்ட மணவாளனே!

"கருதரு திண்புய சரவண"
எண்ணுதற்கும் அரிதான
திரண்ட புயங்களைக் கொண்ட
சரவணன் எனும் பெயர் பெற்ற
அறுமுகக்கடவுளே!

"குங்கும களபம் அணிந்திடும் மணிமார்பா"

அணிமணி குங்குமமும்
அழகிய சந்தனமும்
அளவோடு சேர்த்து
அரும்பெரும் மார்பினில்
அணிந்திருக்கும் அழகனே!


"கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி
அதனில் வளர்ந்து அருள் பெருமாளே."


பொன்னாலான மாடங்கள் சூழ்ந்திருக்கும்
மதுரை என்கின்ற வளம்பெரு நகரினிலே
அருள்கொண்டு அமர்ந்திருக்கும்
பெருமையுடை தலைவனே!



"பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
பவனி வரும்படி அதனாலே

பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி"

கதிரவன், நிலவு, மலை
இவை மூன்றிற்கும் ஓர்
சொந்தமுண்டு!

கதிரவன் எழுவதுவும் மலையினிலே!
மதியவள் உதிப்பதுவும் மலையினிலே!

காலை எழுவதும் கதிரவனாலே!
அவன் செங்கதிர் வீசி
தரையெலாம் பரவி
திசையினில் செல்வதும்
உலகோர் விரும்பிடவே!
அந்த உலாவரும் காட்சி
அதனாலே உலகோரின் மாட்சி!
இதுவோ அது!

மாலை மலருவதும் மதியாலே!
பணி முடிந்து வீடு வந்து
மனையாளுடன் மனம் மகிழ்ந்து
மொட்டை மாடி மீதமர்ந்து
மனம் களிக்கும் வேளையிலே
இருளகற்றி ஒளி விளக்கி
உதிப்பதுவும் மதியொளியே!
இதுவோ அது!

மலை மலையாய்த் துனபம் வரும்
மலை மலையாய் இன்பம் வரும்
மலையெல்லாம் தன் மலையாய்
கொண்டு நிற்கும் மன்னனவன்

இவ்வண்ணம் கதிரவனாய்
மாலைமதியாய் மலைகளாய்
எங்கணும் பரவி வரிசையாகி
நிற்கின்ற நின் திருவடிகளை
நான் அனுதினமும் பாடி

"வளமொடு செந்தமிழ் உரைசெய
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே"


சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்
சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்
சொல்லுதலில் பொருளும் வேண்டும்
இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்

இத்தகு செந்தமிழ்ப் பாக்களை
நான் சூடி உனைப் போற்ற
அதுகேட்டு அடியவர் மனமகிழ
அருள் வரம் தந்து அருள வேண்டும்!

அருஞ்சொற்பொருள்:

பகர = சொல்லத்தக்க
வரை = மலை
அசல = மலை
நெடு = பெருமை வாய்ந்த
கருதரு = நினைப்பதற்கு அருமையான
களபம் = சந்தனம்
கனகம் = பொன், தங்கம்

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க

No comments:

Post a Comment