Tuesday, September 28, 2010

vithishvaran kovil

Elango 01

pp 02

pp 01

Viji Cuddalore 01

Viji Cuddalore

Elango

டிவிட்டரில் குரு - சிஷ்யன்

டிவிட்டரில் குரு - சிஷ்யன்

எழுத்து என்பது பல்முக வடிவம் கொண்ட ஊடகம். முன்பு பனை ஓலை, கல்வெட்டு, செப்பு பட்டையம் என பல்வேறு வடிவில் இருந்த எழுத்து அறிவியல் முன்னேற்றத்தால் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக செய்தி பரிமாற்றத்தின் இடைவெளியும் குறைந்து மக்கள் செய்தியால் நிரம்பி வழியும் நிலைக்கு நம் ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் மனிதன் கடக்கும் செய்தியை எடுத்துக் கொண்டால் அவனின் மூளையின் வேகத்திற்கு இணையாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

ஊடகத்தின் பரிமாணமாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முறை தற்சமயம் பரவலாக இருக்கிறது. அரசாங்கம் கூட குறுஞ்செய்தி பயன்படுத்தி விழிப்புணர்வு செய்தியை கொடுக்க துவங்கி உள்ளது.
பலர் இதனால் கெடுதல் உண்டாகிறது என்றும் மனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

உண்மையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இருக்கும் எந்த ஒரு ஊடகத்தையும் அற வழியில் பயன்படுத்தினோமானால் அதனால் அந்த ஊடகத்திற்கும் நமக்கும் கேடில்லை.

முதலில் இணையம் தோன்றிய காலத்தில் ஆன்மீகவாதிகள் இணையத்தை பயன்படுத்தலாமா என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இன்றோ வலைதளம் இல்லாத ஆன்மீக குழு என்பதே இல்லை என்பது நிதர்சனம்.

மின்னஞ்சலை கூட ஆன்மீகவாதிகள் பயன்படுத்தலாமா? அதில் ‘அட்டாச்மெண்ட்’ உண்டே என்றல்லாம் சிந்தித்த புத்திசாலிகள் பலர் உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மக்களால் அதிகம் நுகரப்படும் ஊடகங்களை ஆன்மீகத்திற்காக பயன்படுத்தினால் தவறு இல்லை என்பது எனது கருத்து.

ஒரு ஊடகம் மக்களை கெடுக்கிறது என கூக்குரல் எழுப்புவதைக் காட்டிலும் அந்த ஊடகத்தை நல்வழியில் பயன்படுத்தி காட்டுவதே ஆன்மீகவாதிகளுக்கு அழகு.

இப்படி நான் கொண்ட கருத்துக்களால் டிவிட்டர் (twitter.com) என்ற சேவையை பயன்படுத்த துவங்கினேன். 140 எழுத்தில் நம் கூற விரும்பும் கருத்தை கூறிவிடலாம். இது செல் போன் குறுஞ்செய்திக்கு ஒப்பானது.
உலகில் பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. சிலர் நான் காலையில் எழுந்தேன், காப்பி குடித்தேன் என தங்களின் செயல்களை எழுதுகிறார்கள். சிலர் உத்தியோக விஷயங்களை கூறுகிறார்கள். பலர் நண்பர்களுடன் பேசி மகிழ்கிறார்கள்.

நமக்குத்தான் மேற்கண்ட விஷயங்கள் வராதே...! அதனால் குரு சிஷ்ய கதைகளை டிவிட்டரில் எழுத துவங்கிவிட்டேன். 140 எழுத்துக்குள் குறுங்கதையாகவும் அதுவே குரு கதையாகவும் இருக்க வேண்டும் என்ற சவாலில் சில கதைகள் எழுதி விட்டேன். அவற்றில் ஒரு டஜன் கதைகள் உங்களுக்காக...
>--------------------------
அற்புதமான தருணம் எது என்ற கேட்ட சிஷ்யனிடம் கூறினேன்.”நான் இல்லாமல் போவது” என்னை கொன்றான் சிஷ்யன்..! #1

தினமும் வேதம் படித்த சிஷ்யனின் வேத புத்தகத்தை பிடுங்கி எரித்தேன். தீய்ந்து கருகிய வாசம் வந்தது. சிஷ்யனின் உள்ளே நறுமணம் வீசத்துவங்கியது- #2

குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டும் என கேட்டான். தட்டி எழுப்ப அது என்ன எருமை மாடா? என்றேன் என் எருமை மாடு சிஷ்யனிடம். #3

எங்கும் கடவுள் நிறைந்திருக்க கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்றால் சிஷ்யன். அங்கும் இருக்கிறார என காண் என்றார் குரு..! #4

தலை முடியை மழித்தால் ஆன்மீகவாதியாகி விடுவேனா என கேட்டான் சிஷ்யன்.நார் உறிக்கப்பட்ட தேங்காய் ஒன்றை காட்டி,ஆன்மீக தேங்காய் என்றார் குரு- #5

ஞானம் அடைய குரு தேவையா என கேட்டான் சிஷ்யன். புன்சிரிப்புடன்,” குருவை அடைய ஞானம் தேவை” என்றார் குரு. #6

சிஷ்யன் : ஆன்மீகமாக இருக்க வெங்காயம் பூண்டு தவிர்க்க வேண்டுமா? குரு-இறைவன் படைப்புகளை ஒதுக்கும் ஆணவம் இருக்கும் நீ எப்படி ஆன்மீகனாவாய்? #7

குடும்ப நபர்களை காட்டிலும் உங்கள் மேல் எனக்கு ஈடுபாடு வர என்ன காரணம் குருவே என்றான் சிஷ்யன்.குரு:அவர்கள் இரத்த உறவுகள், நாம் உயிர் உறவுகள்#8

சிஷ்யன்:உருவவழிபாடு தேவையா? குரு : உன்னை நீ உடலாக நினைக்கும் வரை உருவம் வேண்டும். உடலை கடந்தால் அனைத்தும் அருவமே. ஏன் என்றால் தத்வமஸி..!#9

சிஷ்யன்:மனிதனுக்கு மட்டும் தானே குரு தேவைப்படுகிறார். விலங்குகளுக்கு குரு உண்டா?குரு:மனிதன் என்ற ஆணவம் உனக்கு.ஆகையால் கூறியும் பயனில்லை.#11

சிஷ்யன் : குருவே நான் என்று குரு நிலை அடைவேன்? குரு : என்று நீ சிஷ்யன் ஆகிறாயோ அன்றே அது முடிவாகும். #12

--------------------

Thursday, April 29, 2010

நித்ய பிரம்மச்சாரி...!

ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள். மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அன்று ரோகிணி நட்சத்திர தினம். பிருந்தாவனம் கோலகலமாக இருந்தது. கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவு பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகறைக்கு செல்ல முயன்றனர்.

யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படி சந்திப்போம் என குழப்பமானார்கள்.

யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார். அவர்களிடம் கோபியர்கள் சென்று, “ரிஷிகளின் ரிஷியே இன்று கிருஷ்ணனின் அவதார தினம், அவனை சந்திக்க வேண்டும் ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றை கடக்க முடியுமா என தெரியவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும்” என்றார்கள்.

“ கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்கு கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்” என்றார் வியாச மஹரிஷி.

கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார். கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனை பிறந்த நாள் அன்று சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.

அனைத்து கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி. பிறகு கூறினார், “ கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள். யமுனை வழிவிடும். நீங்கள் கூற வேண்டியது இது தான். வியாசர் நித்ய உபவாசி"

கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன். இவரோ அனைத்து கூடையும் காலி செய்துவிட்டார். மேலும் நித்ய உபவாசி என்கிறார். என்றும் உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா என சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்

யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.

யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.

மறுகரைக்கு சென்று கிருஷ்ணனை சந்தித்தனர். கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

“எங்களை காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூற சொன்னார். யமுனை வழிவிட்டது. நாங்கள் மீண்டும அதே விஷயத்தை கூறி யமுனையை கடக்கலம் என நினைக்கிறோம். நீ அருள் தர வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்டனர்.

மாய புன்னகையுடன் கிருஷ்ணன் , “பக்தியின் சிறந்த கோபிகைகளே யமுனையை கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள் - கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” என்றார் கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் “கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” கூறினார்கள். யமுனை வழிவிட்டது.

புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.

“மஹரிஷியே. இது என்ன முரண்பாடு. நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே? இது என்ன மாய வேலையா?”

“கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாக கருதுகிறேன். இறைவனே என் உணவை உண்கிறார். அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.

கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளை செய்கிறான். அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை. ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான். அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”

தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.

-------------------------------

டிஸ்கி : மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது. சில நாட்களாக பத்திரிகை தொலைகாட்சிகளை பார்க்கும் பொழுது இக்கதை ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !

தற்காலத்தில் இக்கதை நடந்தாலும் தவறு இல்லை. ஆனால் மறுகரையில் வியாசர் இருந்திருந்தால் செய்தித்தாளில் வந்திருப்பார். தான் உபவாசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது வியாசருக்கு தெரிந்திருக்கிறது. சிலருக்கு தெரியவில்லை.

அக்கரைக்கு இக்’கறை’ பச்சை..!

Tuesday, September 29, 2009

நானும் வரம் தரப்போகிறேன்...!

என் இமயமலை பயணத்தின் இடையே கங்கையாற்றின் கரையில் இளைப்பாருவதற்காக அமர்ந்தேன். கங்கை பிரவாகமாக சென்று கொண்டிருந்தது. கண்டிப்பாக ஆழமும் வேகமும் அதிகம் என அதன் போக்கை வைத்து பார்க்கும் பொழுதே தெரிந்தது.

சில நாட்களாக வெளியுலகில் இருந்து துண்டிக்கபட்டிருந்தேன். சரி நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள என் மடிக்கணினியை (Laptop) திறந்து இணைய இணைப்பை இணைத்தேன். அது கம்பி இல்லா அகண்ட அலை சேவை. (wireless broadband) சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. மடிக்கணியை அங்கே இங்கே அசைத்தேன்.. தொடர்பு விட்டு விட்டுவந்தது.. சிறிது சாய்வாகவும் ஒரு மரத்தில் அருகில் சென்றால் ஓரளவு அலைவரிசை கிடைத்தது. ஒரு பக்கமாக சாய்ந்து மரத்தின் அடியே அமர்ந்து கொண்டேன்.. என் கால்கள் இரண்டும் கங்கை ஆற்றின் உள்ளே வைத்திருந்தேன். பயணத்தால் களைத்திருந்த உடலுக்கு கால்களில் குளிர் நீர் படுவது இதமாக இருந்தது.

சில இணைய பக்கங்களுக்கு சென்று உலாவி விட்டு கணினியை மூடி கிளம்ப எத்தனிக்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. கைத்தவறி என் கணினியை கங்கையாற்றில் விழுந்துவிட்டது...!


நினைத்துபாருங்கள் எப்படி இருக்கும் எனக்கு?... செய்வது அறியாமல் திகைத்தேன்.. ஆற்றின் வேகத்திற்கு இந்நேரம் என் மடிக்கணினி வங்காள விரிகுடாவில் கலந்திருக்குமோ என்றெல்லாம் மனதில் எண்ணம் வந்து சென்றது. நல்ல வேளை வலைபக்கத்தை பார்த்த பிறகு மூடிவிட்டேன். இல்லையென்றால் அதில் மீன்கள் மாட்டியிருக்குமே என்று ஒருபக்கம் குழப்பம். அதுவும் அந்த பதிவரின் வலைபக்கம் வேறு. அதில் மாட்ட கூட வேண்டாம். மீன்கள் அதை பார்த்தாலே இறந்துவிடுமே என ஒரு வஞ்சக எண்ணமும் தலைதூக்கியது...

எத்தனை எத்தனை தகவல்கள் அதில்.. எதிர்கால உலகை மேம்படுத்த என சிந்தனைகளை அதில் வடித்துவைத்திருந்தேனே? மக்களை உய்விக்கும் அந்த எண்ண சிதறல்கள் எப்படி மீண்டும் நான் உருவாக்குவேன் என மனவருத்தத்தில் இருக்கும் பொழுது...கங்கை ஆற்றின் மேல் ஒரு புகைமண்டலம் உருவாகியது.....

புகைமண்டலத்தின் நடுவில் ஒரு தேவதை வெளிப்பட்டு கண்கள் கூசும் ஒளியுடன் என்முன் நின்றாள். தேவதையை நீங்கள் பார்க்க வேண்டுமே.... அப்பப்பா... திரைப்பட பாடலில் தேவதை என வர்ணிக்கும் சினிமா நடிகைகளுடன் இந்த தேவதையை ஒப்பிட்டால் அடுத்த ஜென்மத்திலும் நான் தமிழகத்தின் வாக்காளனாகவே பிறக்க நேரிடும்.

தேவதையின் அழகில் மூழ்கி இருக்கும் பொழுது தம்பூராவின் கடைசி தந்தியை மீட்டிய ஒலியில்
தேவதையின் குரல் ஒலித்தது..

“கவலைபடாதே மானிடா... உன் கவலையை போக்கவே நான் வந்திருக்கிறேன். உன் மடிகணினி இது தானே” என பிங்க் நிறத்தில் இருக்கும் சோனி வாயோ மடிகணினியை கண்பித்தாள் தேவதை. அதன் தற்சமய விலை 3800$.

நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்... பிறகு “இல்லை” என்றேன்.

சில வினாடிகளில் மீண்டும் ஒரு மடிக்கணினியை காண்பித்து இதுவா என்றாள். அது 4700$ விலைகொண்ட டெல் கணினி. தேவதையே எனக்கு சாமி டாலர் வாங்வே பணம் இல்லாத பிச்சைக்காரன். நான் எப்படி சோனியும் , டெல்லும் வாங்குவேன்? என்றேன்.

சில நொடிகளுக்கு பிறகு என் லினோவா டப்பாவை தேவதை காண்பித்தாள். நான் ‘ஆம்’ என்றேன்.

“மானிடா உன் நேர்மையை மெச்சினேன்” என்று என் கையை நீட்ட சொல்லி எனக்கு மூன்று கணிப்பொறியையும் கொடுத்தாள் தேவதை.

“தேவதையே உனக்கு அறிவு கிடையாதா? உங்கள் தேவதை பரம்பரையில் முன்னோர்கள் விறகு வெட்டியிடம் செய்தது என்னவோ அதையே நீயும் செய்கிறாயே? மூன்று மடிக்கணியையும் வைத்து நான் என்ன செய்ய? இருக்கும் ஒரு கணினியை வைத்தே உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றேன்.

“ தேவதை பரம்பரை பற்றி கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் யார் முன் தோன்றினாலும் அவர்கள் நான் கொடுக்கும் மூன்று பொருளை வாங்கி செல்லுவார்கள். நீ தான் அதிகப்பிரசங்கி போல இருக்கிறாய்”

“தேவதையே நான் அதிகப்பிரசங்கி என்பது ஊருக்கே தெரியும், ஆனால் விறகு வெட்டி போல வெகுளி அல்ல. நான் புத்திசாலி அதனால்தான் அப்படி கேட்கிறேன்.”

“சரி உனக்கு இவை எல்லாம் வேண்டாம் என்றால் மூன்று வரம் தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்”

“நீ வரம் தருவது இருக்கட்டும். நான் மீண்டும் சொல்லுகிறேன். வரம் கொடுத்துவிட்டு பின்னால் சங்கடப்பட கூடாது”

“அற்ப மானிடனே. நீரில் விழுந்த மடிகணினியை எடுக்க தத்தளித்தாய். இப்பொழுது எனக்கே அறிவுரை சொல்லுகிறாயா? ”

“தேவதைகளுக்கு அழகு இருக்கும் அளவுக்கு..... அ.......அனுசரணை இருக்காது என கேள்வி பட்டிருக்கிறேன்..இன்று தான் நேரில் பார்க்கிறேன். நான் வரங்களை யோசித்து கேட்க விரும்புகிறேன். இப்படித்தான் ஒரு எறும்பு யோசிக்காமல் வரம் கேட்டு மாட்டிகொண்டது”

“எப்படி கொஞ்சம் விவரமாக சொல்லேன்”

“மனிதர்கள் தங்களை வாழவிடுவதில்லை என எறும்பு ஒன்று கடவுளை பார்த்து தவம் இருந்தது. கடவுள் அதன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார். மனிதர்கள் மேல் இருந்த கோபத்தில் எறும்பு கேட்டது. நான் கடித்தவுடன் சாகவேண்டும்.

கடவுள் தந்தேன் என மறைந்தார். வரத்தை சோதித்து பார்க்க மனிதனிடம் சென்று அந்த
எறும்பு கடித்தது. மனிதன் கோபத்தில் அதை “சத்” என அடித்து தூர வீசினான். வரமும் பலித்தது, கடித்தவுடன் எறும்பு செத்தது. யார் சாகவேண்டும் என வரம் வாங்கவில்லை அல்லவா?. இப்படி நான் அல்லல்பட கூடாது என்பதால் யோசித்து கேட்கிறேன் என்றேன். ”

என் தத்துவ கதையை கேட்டு டயர்டான தேவதை. பெருமூச்சு விட்ட பின் கூறியது.

“அதிகம் பேச்சு ஆண்களுக்கு அழகல்ல. முதல் வரம் தர நான் தயார். கேள்”


“ கேட்கும் வரங்களை கண்டிப்பாக கொடுப்பேன் என வாக்கு கொடு. நான் கேட்கிறேன்.”

“என் தேவதை பரம்பரையின் மேல் ஆணை. கேள்”

“ம்......உனக்கும் எனக்கும் நடந்த இந்த சம்பாஷணைகளை நான் ஒரு கதையாக எழுத போகிறேன். அதை அனைவரும் படிக்க வேண்டும்”

“தந்தேன். இரண்டாவது வரம்”

“உலகில் பலர் வரம் கொடுக்கிறேன் பேர்வழி என சுயநலத்தை தூண்டி பிறரின் எதிர்பார்ப்பு எனும் நெருப்பில் குளிர்காய்கிறார்கள். அவர்களை பற்றிய தெளிவு மக்களுக்கு கொடுக்க வேண்டும்”

“அவர் அவர் அழிவுக்கு அவர் அவரே காரணமாக இருப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? இருந்தாலும் நீ கேட்ப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என வரம் தருகிறேன்”

“மூன்றாவது வரம்... மூன்றாவது வரம்....”

“மானிடனே கேள் என்ன தயக்கம்,?”

“எனக்கு மீண்டும் மூன்று வரங்கள் வேண்டும். இதுவே என் மூன்றாவது வரம்”

சிறிது வினாடி யோசித்த அந்த தேவதை.. “சரி. தந்தேன்” என்றது.

நானும் இமயமலை சாரலில் இருந்து வரம் கேட்கிறேன் பேர்வழி என அந்த தேவதையை கூட்டிவந்து விட்டேன். இப்பொழுது எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட தேவதையிடம் வரம் கேட்பது என்றாகிவிட்டது. இரண்டு வரங்கள் கேட்டு விட்டு மூன்றாவதாக மீண்டும் மூன்றுவரம் கேட்டுவிடுவேன். கணிப்பொறி மென்பொருள் போல Do. Loop என திரும்ப திரும்ப தேவதை வரம் கொடுத்து என்னிடம் மாட்டிக்கொண்டது. தேவதை இப்பொழுது தான் உணருகிறது. இவனிடம் வசமாக சிக்கிவிட்டோம் என்று. இனி தேவதை பரம்பரையில் யாரும் புத்திசாலிகளுக்கு வரம் தர மாட்டார்கள்...!

உங்களுக்கு ஏதாவது வரம் வேண்டுமா? இரண்டு வரம் கேளுங்கள்... மூன்றாவது வரம் என்ன என்பது உங்களுக்கே தெரியுமே..

Sunday, May 10, 2009

கிபி 5503

தனது கதிரியக்க உடையை அணிந்துகொண்டான் இண்டூ என செல்லமாக அழைக்கப்படும் இண்டெலன். தலையில் பறக்கும் கவசத்துடன் தயாராகி வீட்டின் வெளியே வந்தான்.

பேராசிரியரின் வீட்டிற்கு செல்ல முன்பே மனோ தள தகவலை சினேகிதி பார்ப்பிக்கு அனுப்பி இருந்தான். தூரத்தில் சிவப்பு உடையில் தலைபகுதியில் விசிறி பறக்க என்னருகில் வந்தாள் பார்பி.

அவளை பார்த்த பார்வையில் புரிந்து கொண்டாள், “ஏன் தாமதம் என கேட்கிறாயா? என்னை பிரதி எடுத்து கொள்ள சென்றேன். இதோ என் பிரதி” என அவளை போலவே மற்றொரு உயிரை காட்டினாள். இவள் எதற்கு என்றேன்.

"வீட்டில் வேலை செய்ய ஆட்கள் தேவை பட்டது அதனால் பிரதி எடுத்தேன்,அது இருக்கட்டும் இண்டூ,பேராசிரியர் கிழத்திற்கு என்ன வந்தது எதற்காக வ்ரச்சொன்னார்?”

"எதோ ரகசிய ஆய்வு செய்திருக்கிறாராம், நம்மிடம் காட்ட விரும்புகிறார். வா செல்லலாம். நேரம் 45 அணுக்களை தாண்டிவிட்டது. இன்னும் தாமதம் வேண்டாம்.”



தனது பிரதியை அனுப்பி விட்டு தயாரானாள் பார்ப்பி. தங்கள் தலை பகுதி விசிறியை இயக்கி இருவரும் பறந்தனர். பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமவெளியாக இருந்தது. வீடுகள் ஈர்ப்பு விசையில்லாமல் அந்தரத்தில் மிதங்கி கொண்டிருந்தது. அதன் குறுக்கே பறந்த பார்பியும், இண்டூவும் பேராசிரியர் வீட்டை அடைந்தனர்.

தங்களை வீட்டின் வாயிலில் இணைத்து கொண்டதும் கதிரியக்க ஆய்வுக்கு பிறகு இருவரையும் வீடு தன்னுள்ளே இழுத்துக்கொண்டது. பேராசிரியர் இருவரையும் வரவேற்று, அரசின் கண்காணிப்பு கருவியை தற்காலிகமாக நிறுத்தினார்.

அவர் உபசரிப்புக்காக வழங்கிய ஆக்சிஜனை முகர்ந்த படியே கேட்டனர், “எங்களை வர சொன்னதன் நோக்கம் என்ன பேராசிரியரே?”

தனது தாடியை சொறிந்தபடியே கூறத்துவங்கினார்.

“பல நூற்றாண்டுக்கு முன்பு மனித இனம் சிலவிதமான கதிரியக்க போரால் அழிந்துவிட்டது. இந்த கிரகம் முழுவதும் அழிக்கப்பட்டு சில எஞ்சிய மனிதர்கள் மூலமே மனித இனம் தழைத்து வருகிறது.இந்த கிரகத்தின் நிலப்பரப்பு தனது முழு சக்தியை இழந்து வெறும் நிலமாக காட்டி அளிக்கிறது. ஈர்ப்புவிசைக்கு எதிராக பழகிய நாம், நிலத்தை தோண்டி பார்க்க அரசு அனுமதிப்பதில்லை. அதையும் மீறி ஒரு நாள் நிலத்தை தோண்டி பல நூற்றாண்டுக்கு முன் மனித இனம் பயன்படுத்திய ஒரு கருவியை எடுத்துவந்தேன். அதில் ஆச்சிரியப்படும் சில செய்திகள் பார்த்தேன். இதோ பாருங்கள்”

அங்கே சதுர வடிவில் ஒரு கருப்பு நிற பொருள் இருந்தது. இரு மடிப்பாக இருந்த அந்த பொருளை திறந்து விசையை அழுத்தினார் பேராசிரியர்.

"windows Xp" என ஒளியை உமிழ்ந்தது...

சில அனுத்துகள் நேரத்திற்கு பிறகு தன் ஒளி பகுதியில் காட்சி மாறியது.
“பார்த்தீர்களா எப்படி வேலைசெய்கிறது- இன்னும் இதற்கு உயிர் இருக்கிறது” என்றார் பேராசிரியர்.

"ஐயா அது என்ன மூலையில் ஏதோ எண்வடிவில் தெரிகிறதே?” என்றான் இண்டூ.


“நமது முன்னோர்களின் கடிகாரம். அதில் 1980 முதல் 2999 வரை எண்கள் இருக்கிறது. ”


"அதற்கு பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது?”


"தெரியவில்லை. ஒருவேலை அவர்கள் வேறுகிரகத்திற்கு பயணித்திருக்கலாம்”


"இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்” என்றாள் பார்ப்பி.


“இதில் பல தகவல்கள் உண்டு. அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இதில் அறிந்து கொள்ள முடியும். இதை பயன்படுத்தியவர்
தனது நண்பருக்கு சில தகவலை பரிமாறி இருக்கிறார். அதில் வரும் சில வார்த்தைகளுக்கு என்னால் அர்த்தம் காண முடியவில்லை ஆனால் அகராதியில் தேடிவருகிறேன்.”
"அது என்ன வார்த்தைகள் பேராசிரியரே?”

"மாப்ளே, சும்மா,சினிமா, சாப்பிடுதல் என்ற பல வார்த்தைகள் நடைமுறையில் இல்லை. அந்த மனிதர் பெரிய இலக்கியவாதியாக இருப்பர் என
நினைக்கிறேன். அதனால் தான் கடுஞ்சொற்களை பிரயோகித்திருக்கிறார்”

“இதற்கும் எங்களை வர சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ஆசிரியரே?”

“இண்டூ, இந்த கருவியின் ஓரத்தை கவனித்தாயா? உனது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன் இது ஆலயத்தில் வழிபட்ட
கருவியாக இருக்கலாம். இல்லையென்றால் நம் கடவுள் இண்டல் பெயர் இதில் இருக்குமா? மேலும் இந்த கருவியின் தகவல் களஞ்சியத்தில் பார்ப்பி என்று தேடினால் ஒரு பெண் உருவின் தகவல் வருகிறது. நிச்சயம் அது ஒரு வகுப்பினரால் வணங்கப்பட்ட பெண் தெய்வமாக இருக்கலாம்”

”பேராசிரியரே, தயவு செய்து உங்கள் ஆய்வுகளை நிறுத்துங்கள். நமது மின்னனுக்கடவுள் இண்டல் பல நூற்றாண்டுக்கு முன் கிடையவே கிடையாது”
“உங்களுக்கு எனது ஆய்வு வேடிக்கையாக இருக்கலாம். உண்மையில் அவரிகளிடம் ஒரு சிறிய தகடு இருந்திருக்கிறது. அதை கையில் வைத்துக்கொண்டால் அஷ்டமா சித்தி கிடைக்குமாம்”

“அஷ்டமா சித்தி என்றால்?” என்றனர் கோரசாக.

”தொலைதூரத்தில் இருக்கும் நபரிடம் பேசுதல், அவரின் பிரதியை காணுதல், ஒலி மற்றும் ஒளியை ஏற்படுத்துதல், தகவல்களை பரிமாறுதல், அசைவு படம் எடுத்தல் என பல சித்திகள்.”

“பேராசிரியரே, இது சாத்தியமா? ஏன் வீண் காலவிரயம்? “

”நீங்கள் நம்பவில்லை என்றால் போங்கள் இந்த தகடை வைத்து நான் அஷ்டமா சித்தியை பெருகிறேன்.”

பேராசிரியர் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மொபைல் சிம் கார்ட்டை பிளாஸ்டிக் பூக்களையும், டார்ச்சு லைட்டையும் வைத்து பூஜிக்க துவங்கினார்.

டிஸ்கி : தற்காலத்தில் மந்திர, யந்திரங்களை பயன்படுத்தும் முறையையும் - மாயன் கலாச்சாரம் பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் காட்டுரையையும் படித்ததால் உருவான சிறுகதை.

தக்‌ஷிண மேரு

தென் திசையில் இருக்கும் பெரும் மலை என்ற பொருளில் தக்‌ஷிண மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆயிரம் வயது....!


பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த வாரகாலத்தில் பல்வேறு செய்திகளை அளித்தார்கள். பெரிய கோவிலின் சிறப்புகள் மற்றும் சரித்தரத்தை சுவைபட எழுதினார்கள். பிரகதீஸ்வரர் கோவில் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

தஞ்சை பெரிய கோவில் தென்னிந்திய கட்டட கலைகளிலிலும், ஆகம விதியின் அடிப்படையிலும் தனித்துவமாக இருக்கிறது. கருவறைக்கு மேல் விமான அமைப்புக்கு பதிலாக, கருவறைக்கு மேல் பெரிய கோபுரம் கொண்ட கோவிலாக திகழ்கிறது.


கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பெரிதாக காண படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.

கருவறைக்கு மேல் இருக்கும் கோபுரம் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் மட்டுமல்ல இது எக்காலத்திலும் சாத்தியமா என வியக்க வைக்கிறது. திருச்சிக்கு அருகே 60 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்ததை சாதனையாக கூறுகிறார்கள். உண்மையில் கல்லை கொண்டு வருவது சாதனை அல்ல, அந்த கல்லை கொண்டு கோபுரத்தில் சிலைகள், சின்ன சின்ன சிற்பங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கனக்கான டன் எடை உள்ள கல்லின் எதோ ஒரு முனையில் தவறு செய்தாலும் மொத்த கோபுரமும் வீண் என்பதை நினைவு கொள்ளுங்கள்...!

கோபுரம், கோவில் கருவறை, கருவறைக்குள் இருக்கும் சிவலிங்கம் என அனைத்தும் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது . ஒரே கல்லில் செய்ய வேண்டும் என ஏன் தோன்ற வேண்டும் என்றால் இது ‘ஏகம்’ என்ற ஒருமை தன்மை வாய்ந்த அத்வைத்த கோவில் ஆகும். சிவனை தவிர வேறு எதுவும் வழிபடாத ஒருமை தன்மை வாய்ந்ததாக இருந்து, பின்பு பிற்காலத்தில் மாற்றம் அடைந்தது.
சிவனை மட்டும் முழு முதற்கடவுளாக கொண்டு லிங்கத்தை மட்டுமே மனதில் வைத்து கட்டப்பட்டது. இங்கே சக்திக்கும், நந்திக்கும் முக்கியத்துவம் முன்பு அளிக்கப்படவில்லை. ராஜராஜனுக்கு பிறகு வந்த பல்லவ அரசர்களே தற்சமயம் இருக்கும் நந்தியை ஸ்தாபித்தார்கள். பிற்கால சைவ சிந்தாந்த ஆகம சாஸ்திரங்கள் லிங்கத்தின் அளவுக்கு நந்தி இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு இவ்வாறு உருவாக்கப்பட்டது.

பெரியகோவிலின் தல விருட்சம் மற்றும் அதன் அடியில் வீற்றிருக்கும் காளியின் அம்சம் கொண்ட ப்ரதியங்கரா தேவி சக்தியாக இக்கோவிலில் விளங்குகிறது.

பூமியில் நிழல் விழுகாத கோபுர கலசம்

கோபுரத்தின் நிழல் கீழே விழுகாது என சிலர் கூறுவார்கள். உண்மையில் கோபுர நிழல் கீழே விழும். ஆனால் கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம் நிழலில் எப்பொழுதும் தெரியாது. கோபுர கலசம் நிழல் விழுகாது என்ற விளக்கம் நாளடைவில் கோபுர நிழல் விழுகாது என மருவியது.


நவக்கிரங்களின் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் தனித்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களும் லிங்க ரூபமாகவே இருக்கிறது. அனைத்து இறை சக்தியையும் லிங்கமாகவே கொண்டு முன்பு கட்டபட்டு பின்பு வந்த அரசர்களால் அது விக்ரஹங்களால மாற்றபட்டது. எனினும் நவகிரஹங்கள் இன்றும் லிங்க ரூபமாகவே இருப்பது தனிச்சிறப்பு.


கோவிலின் பக்கவாட்டு சுவர் பகுதியில் இருக்கும் விஷ்ணு துர்க்கை மிகவும் அழகுவாய்ந்த சொரூபம். என் நினைவுக்கு எட்டியவரை இவ்வளவு அழகுடன் துர்க்கை ரூபத்தை நான் கண்டது இல்லை.

கோவிலின் உள் பிரகாரத்தில் இருக்கும் கற்சங்கிலி மற்றும் கல் ஓடு வேலைகள் சிற்பக்கலையின் உச்சபட்ச சாதனைகள்

முன்பு ஒரு சமயம் நான் சென்ற பொழுது ஒரு அவலத்தை கண்டேன். கல்வெட்டு உள்ள பகுதியில் பொங்கல் பிரசாதம் சாப்பிட்டு விட்டு கைகள் துடைத்து விட்டு சென்று இருந்தார்கள். கல்வெட்டின் எழுத்து இருக்கும் குழிகளில் உணவு துகள்கள் நிரம்பி இருந்தது. வேதனை அடைந்து, என் கைகளில் இருந்த துணியால் அந்த கழிவுகளை துடைக்கும் பொழுது ஒரு கோவில் அதிகாரி நான் கல்வெட்டை சேதப்படுத்துவதாக கடிந்து கொண்டார். ஆயிரம் ஆண்டு விழாவிற்கு கோவில் பொலிவுடன் இருப்பது பெரிய காரியம் அல்ல. உண்மையில் பின்வரும் காலத்தில் அவை காக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஆயிரம் வருடத்தை கடந்த பல கோவில்கள் இருக்கிறது. காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தை பார்த்து தான் ராஜராஜ சோழனுக்கு பெரிய கற்கோவில் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாம். ஆனால் அத்தகைய கோவிலுக்கு எல்லாம் விழா கொண்டாட வில்லை என்பது இத்தருணத்தில் நினைவு கொள்வோம்.

ராஜராஜ சோழன் ஒரு பேரரசனாக, சக்ரவர்த்தியாக, ஜனநாயகத்தை முதலில் அமைத்த மன்னனாக கூறுகிறார்கள். உண்மையில் ராஜராஜ சோழன் ஒரு ஆன்மீக உயர்நிலையில் இருந்தவன். அந்தணர்களிடம் இருந்து சைவ நூல்களை மீட்டு எடுத்தது அவற்றை காக்க முற்பட்டது, பல்வேறு சமயத்திற்கு சம நீதி கொடுத்தது, பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடித்து பிறகு முடி துறந்து தனிமையில் வாழ்ந்தது என அவரின் ஆன்மீக சுவடுகள் ஏராளம். இன்று அத்தகைய மாமனிதனின் சமாதி கேட்பாரற்று கிடக்கிறது. அந்த சமாதி கோவிலை நிர்வகிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

சதய நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்கள் நானும் ராஜராஜனும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என கூறிக்கொள்ளலாம்.

பிற்கால சந்ததியினருக்கான தஞ்சாவூர் கல்வெட்டுடன் ஸ்வாமி ஓம்கார் :)

டிஸ்கி : இது எல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு நீங்க நினைக்கலாம். தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வச்சா.. நமக்கு பின்னாடி வரும் சந்ததியினர் படிச்சு புரிஞ்சுக்குவாங்கல்லனு...நினைத்தேன். அங்கே இருக்கும் கல்வெட்டுக்கள் இப்பொழுது சேதமடுத்தியும்,இடமாற்றப்படுவதாலும் இங்கே பதிவாக எழுதிவிட்டேன்... அது உங்க மனசுல கல்வெட்டா இருகட்டுமே!

பெரிய கோவில் படங்கள் உதவி : ஸ்வாமி ஓம்கார் :)

Friday, September 24, 2010

நிமித்தத்தை புரிஞ்சுக்குங்க..!

சில நாட்களாக இங்கே நான் எழுதவில்லை. பலரும் பல்வேறு கடிதங்கள், தொலை பேசி அழைப்புகள் மூலம் என் நலன் விசாரித்தனர். அவர்களின் அன்புக்கு என் வணக்கங்கள். சிலர் முதன் முதலில் என்னுடன் உரையாடி, ‘இவர்’கள் எல்லாம் என் வலைபக்கத்தை படிக்கிறார்களா என வியக்க வைத்தார்கள்.

சென்ற பதிவுகளில் நான் குறிப்பிட்ட நிமித்தம் என்ற இயற்கை மொழியை பலர் பாராட்டி இருந்தீர்கள். தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிமித்தமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கூட பகிர்ந்துகொண்டீர்கள். பலர் நிமித்தம் ஒரு துர்சம்பவத்திற்கு அறிகுறியாகவே விளக்கி இருக்கிறார்கள்.

உண்மையில் நிமித்தம் அனைத்து சம்பவங்களையும் கூறும் பொது தன்மை கொண்டது. அப்படியானால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் மட்டும் எப்படி தெரிகிறது?

அதற்கு காரணம் ஏதேனும் தவறாக நடக்கக்கூடும் எனும் பொழுது உங்கள் விழிப்புணர்வு முழுமையாக திறந்த நிலையில் இருக்கும். அதனால் தான் முன்பு “உங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும்” என கூறினேன். விழிப்புணர்வு என்பது என்ன என பலர் வெவ்வேறு தளத்தில் விளக்குகிறார்கள். உண்மையில் விழிப்புணர்வு என்றால் என்ன என தெரிந்துகொள்வோம். :)

நாம் மனம் மற்றும் உடல் என்ற இரு கருவிகளால் ஆளப்படுகிறோம். ஆனால் இரு கருவிகளும் இணைந்து செயல்படாமல் தனித்தனியே வேலை செய்கிறது. அதனால் நம் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருப்பதில்லை. உதாரணமாக உணவு உட்கொள்ளும் பொழுது நம் உடல் உணவை உண்ணுகிறது ஆனால் நம் மனம் வேறு ஒன்றை சிந்திக்கிறது. மனம் உண்ணாத உணவை, உடல் மட்டும் உண்ணுவதால் உடல் வியாதியால் துன்பப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் உண்ணும் செயலில் மனம் மற்றும் உடல் இணைந்து செயல்பட்டால் அதன் பெயர் விழிப்புணர்வுடன் உண்ணுவது என்பதாகும்.

இரட்டை மாட்டு வண்டியை செலுத்தும் பொழுது மாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சென்றால் என்ன நடக்கும்? இரு மாடுகளையும் தன் வழிக்கு கொண்டுவந்து வண்டியை ஓட்டுவது வண்டிக்காரனின் தொழில் அல்லவா? அதனால் தான் மனம் மற்றும் உடல் என்ற மாடுகள் இணைந்த வண்டி என்ற வாழ்க்கையை ஆன்மா என்ற வண்டிக்காரன் சரியாக ஓட்டவேண்டும். இவ்வாறு மனம் மற்றும் உடல் இணைந்த நிலைக்கு விழிப்புணர்வுடன் இருத்தல் என பெயர். இதையே யோகா என்கிறோம்.

மனம் மற்றும் உடல் ஒன்றி நம் வாழ்க்கையை கவனிக்கும் பொழுது ஒவ்வொரு ஷணமும் நமக்கு இயற்கை பலவற்றை கற்றுக்கொடுக்கும். இக்கருத்தைத்தான் நிமித்தம் என்பதில் விளக்கினேன். ஒரு நிமித்தத்தை விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கும் விழிப்புணர்வு அற்று கவனிப்பதற்கு என்ன வித்தியாசம்? இதை ஒரு கதைவடிவில் பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் நடந்த சம்பவம் இது. சுப்பாண்டியும் சுந்திர பாண்டியும் ஜோதிட மாணவர்கள். குருகுல முறையில் சாஸ்திரங்களை பாஸ்கராச்சாரியார் என்ற ஜோதிட ஆச்சாரியரிடம் பயின்று வந்தனர். ஒரு நாள் இருவரும் தங்கள் குருவிடம் சென்று ஐயா நாங்கள் பல நாள் இங்கே சாஸ்திரம் கற்றுவிட்டோம், ஆனால் இதை பயன்படுத்தும் சூழல் இல்லை. பல தேசங்களுக்கு சென்று நீங்கள் கற்றுக்கொடுத்ததை பயிற்சி செய்யலாம் என இருக்கிறோம் என்றனர்.

பாஸ்கராச்சாரியார் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணிக்கும் படி கூறினார். முன்பு சிஷ்யர்கள் இருவரும் பயணத்தை துவங்கி செல்லவும், சில நாட்கள் கழித்து தானும் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் திட்டம் உண்டு என்றும் கூறினார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுப்புவும், சுந்திரனும் தங்கள் பயணத்தை துவக்கினார்கள்.

பழங்காலத்தில் பயணங்கள் கால்நடையாகவே செல்வார்கள் என்பதால் இருவரும் அவ்வாறே பயணமானார்கள். வழியில் இருவருக்கும் தாகம் எடுத்தது. நீர் குடிக்க அருகில் வசதி உண்டா என தேடும் பொழுது அங்கே ஒரு பெண் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே இருவரும் சென்று, “அம்மா, எங்களுக்கு குடிக்க சிறிது நீர் தருகிறீர்களா?” என கேட்டனர். அந்தப்பெண் திடீரென தனக்கு பின்னால் கேட்ட சப்தத்தால் பயந்து கிணற்றில் கையிறுடன் கட்டப்பட்டிருந்த நீர் இறைக்கும் மண் பானையை தவறவிட்டாள். பிறகு தன்னிலை அடைந்து அசுவாசம் கொண்டால். தன்னிடம் உள்ள மற்றொரு பானையின் உதவியால் நீர் எடுத்து இருவரின் தாகத்தையும் தீர்த்தாள்.

இருவரும் திருப்தியாக நீர் அருந்தியதும், “அம்மா, எங்கள் தாகத்தை தீர்த்தீர்கள். உங்களுக்கு பிரதி உபகாரமாக ஏதேனும் செய்யவேண்டும் என எண்ணுகிறோம். நாங்கள் சாஸ்திரம் கற்றவர்கள். உங்களுக்கு ஏதேனும் ஜோதிட பலன் தேவைப்பட்டால் கூறுகிறோம் கேளுங்கள்” என்றனர்.

பெண் வேண்டாம் என கூறினாலும் இவர்கள் உதவுகிறோம் என கூறியதால் அப்பெண் கேட்கத் துவங்கினாள். “நீண்ட நாட்களுக்கு முன் என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. அவர் வருவாரா? எப்பொழுது வருவார் என கூறுங்கள்?” என்றாள்.
இருவரும் மூளையை கசக்கினார்கள், பிறகு ஒரே நேரத்தில் பதில் கூறினார்கள். சுப்பாண்டி “வருவார்” என்றான், சுந்திர பாண்டியோ “வரமாட்டார்” என்றான்.

இந்த பதிலை கேட்டு அப்பெண் குழம்பிப்போனாள். சுப்பாண்டியும், சுந்திரபாண்டியும் தாங்கள் சொன்னது தான் சரி என விவாதம் செய்யத் துவங்கினார்கள். விவாதம் சண்டையாக மாறியது. அந்த ஊர்மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கத் துவங்கினார்கள். முடிவில் இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்துக்கு சென்றது.

பஞ்சாயத்தை விசாரித்த ஊர் தலைவர் சுப்பாண்டியை பார்த்து கூறினார், “சுந்திர பாண்டி பெண்ணின் கணவர் வரமாட்டார் என கூறினார். அதனால் அதை மேற்கொண்டு ஆராய முடியாது. நீங்கள் வருவார் என கூறி இருக்கிறீர்கள். அப்படியானால் எப்பொழுது என கூறுங்கள்?” என்றார்.

சுப்பாண்டி கணிதம் செய்து, நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு இரண்டு நாழிகையில் பெண்ணின் கணவர் வருவார் என பலன் கூறினான். நாளை வருவார் என கூறுவதால் பஞ்சாயத்தை நாளை வரை தள்ளிவைத்து காத்திருப்போம். அவ்வாறு நடக்கவில்லை என்றால் சுந்திர பாண்டி சொன்ன பலனே சரி என முடிவுக்கு வருவோம் என்றார் ஊர் தலைவர்.

அடுத்த நாள் சூரியன் உதித்தது, பஞ்சாயத்தில் ஊர்மக்கள் கூடி நின்றார்கள். அந்த பெண்ணும் காத்திருந்தாள். நேரம் இரண்டாம் நாழிகையை நெருங்கிய சமயம் அப்பெண்ணின் கணவர் வந்தார். அவர் வேறு யாரும் அல்ல பாஸ்கராச்சாரியார் தான்...!

சுந்தர பாண்டியும், சுப்பாண்டியும், “குருவே” என அவரின் முன் சென்று வணங்கினர். பாஸ்கராச்சாரியார் நடந்தவற்றை கேட்டு உணர்ந்தார். தான் வெகு காலம் முன் மனைவியை பிரிந்து பல தேசம் சென்றதையும், பிறகு அவளை இங்கே சந்திப்பேன் என நினைக்கவில்லை என கூறி மகிழ்ச்சி அடைந்தார். ஊர்மக்கள் சுப்பாண்டியின் ஜோதிட திறமையை பாராட்டினார்கள்.

அனைவரும் இணைந்து பாஸ்கராச்சாரியாரின் குருகுலம் இருக்கும் ஊரை நோக்கி செல்ல துவங்கினார்கள். அப்பொழுது குரு தன் சிஷ்யர்களிடம், “இருவருக்கும் சமமாக அறிவை போதித்தேன், ஆனால் நீங்கள் எப்படி முரண்பட்ட பலன்களை ஏன் கூறினீர்கள்?” என கேட்டார்.

“குருவே அம்மையார் கேள்வி கேட்கும் முன் தன் கையில் இருந்த மண் குடத்தை கிணற்றில் தவறவிட்டார். அதை பார்த்து கணவன் வரமாட்டார் என கூறினேன்” என்றான் சுந்திரபாண்டி.

நீ எப்படி கூறினாய் என்பது போல சுப்பாண்டியின் மேல் பார்வை செலுத்தினார் பாஸ்கராச்சாரியார். “குருவே நானும் அதே மண்குடத்தை வைத்து தான் கூறினேன். ஆனால் வேறு கோணத்தில் சிந்தித்தேன். மண்னும் நீரும் குழைந்து செய்ந்த மண் குடம் கிணற்றில் விழுந்ததும் இத்தனை நாள் பிரிந்திருந்த மண்ணுடன் மண்ணும், கிணற்று நீருடன் நீரும் இணைந்திருக்கும் அல்லவா? அதனால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள் என கூறினேன்” என விளக்கினான்.

இதைத்தான் சூட்சுமமாகவும் விழிப்புணர்வுடனும் நிமித்தத்தை கவனிப்பது என்கிறேன். இவ்வாறு செய்வதற்கு பயிற்சி எல்லாம் தேவையில்லை உணர்ந்து கொண்டால் போதுமானது.

ஒருவருடன் தொழில் சார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். அச்சமயத்தில் தபால்காரர் நம் பெயருக்கு ஒரு கடிதத்தை கொண்டு வருகிறார். தொழில் பற்றி பேசும் பொழுது புதிய விஷயங்கள் நம்மை வந்து அடைகிறது என்ற நிமித்தத்தை இதில் உணரலாம். ஆனால் இப்படி மேலோட்டமாக நிமித்தத்தை அணுகாமல் அந்த அஞ்சல் எப்படி பட்டது என பார்க்க வேண்டும். அது நல்ல செய்தி கொண்ட கடிதமானால் தொழில் முன்னேற்றத்தால் நன்மை வந்து அடையும் என கொள்ளலாம். மாறாக அது உங்களுக்கு தவறாக வந்த கடிதமாக இருந்தாலோ, வக்கீல் நோட்டீஸாக இருந்தால் இந்த நிமித்தம் தொழில் மேன்மையை காட்டாது...!

என் மாணவரின் உறவினர் ஒருவர் காணாமல் போய்விட்டார். குடும்பத்தைவிட்டு திடீரென காணாமல் போனதால், அவர் திரும்ப வருவாரா என என்னிடம் ஜோதிடத்தில் கேட்பதற்கு வந்தார். நான் கிரகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுத் அவரின் கைபேசி ஒலித்தது. என் மாணவரின் மனைவி அவருக்கு தொடர்பு கொண்டார் என நினைக்கிறேன்.

மறு முனையில் என்ன கேள்வி என தெரியவில்லை. ஆனால் என் மாணவர் “ஆமா ஆமா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன். வந்துடுவேன்” என்றவாறே பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார். இப்பொழுது சொல்லுங்கள் அந்த உறவினர் திரும்ப வந்திருப்பாரா இல்லையா? ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். அவர் உறவினர் மீண்டும் குடும்பத்தை வந்தடைந்தார்.

இதே மாறாக அவர் கைபேசியை எடுத்து, “அலோ... இல்லீங்க... ராங் நம்பர்” என்றால் அவர் உறவினர் கண்டிப்பாக வரமாட்டார் என நிமித்தம் உணர்த்தும்.

லேட்டஸ்டாக நடந்த சம்பவம் ஒன்று உங்களுக்காக...

புதன் கிழமை அன்று என்னை சந்திக்க வருவதாக சொன்ன நண்பர் வரவில்லை. அவருக்காக காத்திருந்து வராத காரணத்தால் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரோ சில காரணத்தால் நாளை கிளம்பி வருகிறேன் இன்று வரவில்லை, பயணம் “தள்ளிப்போகிறது” என்றார். பிறகு பேச்சுவாக்கில் அயோத்தி தீர்ப்பு வெள்ளி அன்று 24ஆம் தேதி வருகிறதாமே அந்த நேரத்தில் பயணம் செய்வது நல்லதா என கேட்டார்.

நானோ அன்று தீர்ப்பு வராது தள்ளிப்போகும் என்றேன். நேற்று என்னை சந்தித்து எப்படி இவ்வளவு உறுதியாக சொன்னீர்கள் என கேட்டார். அதெல்லாம் “தேவரகசியம்” என்றேன்...! உங்களுக்கு இந்த தேவ ரகசியம் புரிந்தது தானே?

நிமித்தத்தை தேவையான அளவு விளக்கிவிட்டேன். இனி விழிப்புணர்வுடன் நிமித்தம் பார்த்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Tuesday, September 7, 2010

நிமித்தம் - பகுதி 2

மனிதன் தான் என்ற அஹம்பாவம் இருக்கும் வரை இறை அருளை உணர்வதில்லை. இக்கருத்து நிமித்தத்திற்கும் பொருந்தும். இயற்கை நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

தயாராக மட்டுமல்ல பதில் கூறியும் வருகிறது. ஆனால் நம்மால் அந்த கருத்தை உணர முடியவில்லை. காரணம் நம்மை விட விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்ற ஆணவப்போக்கு இதன் மூல காரணமாகும்.

இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முடியாத இயலாமையில் இருப்பதை பலர் உணர்வதில்லை. உங்களுக்கு சில விஷயங்களை கூற இயற்கை எப்பொழுதும் தயாராக இருக்கிறது. இயற்கையின் மொழியை மொழிபெயர்க்க கற்றுக்கொள்ளுங்கள். அம்மொழியின் பெயரே நிமித்தம்.

சகுனம் என்ற வட மொழி சொல்லுக்கு அசையும் பொருள் / சலனமடையும் என்று அர்த்தம். சகுனம் என்பதற்கு எதிர்பதம் நிர்குணம் என்பார்கள். இறைவன் நிர்குண ப்ரம்மம் என்பார்கள். சகுனம் என்பது அசையும் பொருட்களான மனிதன், விலங்குகள், பறவைகள் கொண்டு கூறக்கூடியது. உதாரணமாக பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனம் என்பார்கள். விதவைகள் எதிரில் வந்தால் கெட்ட சகுனம். சுமங்கலி எதிரில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள். இது மூடநம்பிக்கை. காரணம் சகுனத்தை உங்களால் உருவாக்க முடியும். நிமித்தம் தானாகவே நிகழ்வது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நிமித்தம் என்பது உங்களுக்கு நிகழப்போவதை சூசகமாக வேறு ஒரு நிகழ்வின் மூலம் குறிப்பிடுகிறது. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் விழிப்புணர்வுடன் கவனிப்பதற்கு நிமித்தம் பெரும் உதவியாக இருந்தது. சில சம்பவங்களை உங்களின் புரிதலுக்காக விவரிக்கிறேன்.

நான் வெளியூர் செல்வதாக இருந்தால் என் வெளியூர் பயணம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நிமித்தம் பயன்படுத்துவேன். நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் வரை எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுகிறதோ அதே போன்ற நிலைதான் என் முழு பயணத்தின் பொழுது நிகழும் என்பதை நிமித்தம் சுட்டிக்காட்டும்.

ரயில் நிலையம் செல்லுவதற்கு டாக்ஸியில் செல்லும்பொழுது டிரைவருக்கும் எனக்கும் நடக்கும் சம்பாஷணை மற்றும் சிக்னலில் நிற்கும் பொழுது ஏற்படும் தாக்கம் போன்றவை என் முழு பயணம் எப்படி இருக்கும் என்பதை கூறிவிடும். இக்கருத்தை நீங்களும் முயன்று பாருங்களேன்..!

சில வருடங்களுக்கு முன் என் நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளர். தனது ஆய்வு மூலம் ஐநா சபையின் பாராட்டுதலை பெற்றவர். தான் அடுத்த ஆய்வு செய்யப்போவதாகவும், அது முந்தைய ஆய்வை விட மேம்பட்டதாக மக்களிடையே சென்று அடையுமா என்றும் கவலைப்பட்டார்.

அவ்வாறு அவர் சொல்லும் பொழுது அவரின் சட்டைப்பையில் இருந்த பேனாவிலிருந்து மை கசிந்து அவரின் சட்டையில் பரவத்துவங்கியது. நான் சட்டைப்பையை கவனிப்பதை கவனித்த அவர் உடனடியாக செயல்பட்டு அருகில் இருந்த தண்ணீர் குடத்திலிருந்து நீர் எடுத்து மையை கழுவத் துவங்கினார். நீர் பட்டதும் மை மேலும் பரவி சட்டை முழுவதும் கறைபடிந்தது. இந்த நிமித்தம் என்ன சொல்லுகிறது என உங்களால் யுகிக்க முடிகிறதா?

இந்த நிமித்தம் கண்டதும் மகிழ்ச்சியுடன் கூறினேன், “ஐயா.. முன்பு நீங்கள் செய்த ஆய்வு தானே பாராட்டப்பட்டது. ஆனால் தற்சமயம் நீங்கள் செய்யும் ஆய்வு முன்பு செய்ததைவிட மிகவும் பாரட்டப்பட்டு உலக புகழ் அடையும் என்றேன்”. சில மாதங்களில் அவ்வாறே நடந்தது.

இப்படி என் வாழ்க்கையில் நான் நிமித்தத்தை பயன்படுத்தியதை பற்றி கூறத்துவங்கினால் அது என் சுயசரிதையாக மாறும் அபாயம் உண்டு. மேலும் இதை படிப்பவர்கள் என்னுடன் இயல்பாக பழகாமல் போகவும் வாய்ப்புண்டு. இது நல்ல நிமித்தமல்ல :)

முன்னாள் பாரதப் பிரதமர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று கூறுகிறேன். தான் செல்லும் விமானம் மூன்று முறை எதிர்பாராதவிதமாக பழுதுபட்டு விட அவர் தான் செல்லும் ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என முடிவு செய்கிறார். விமானி ஓட்ட முடியாது என கூறியும், விமான கோளாரு என்றும், வானிலை சரி இல்லை என்றும் பல தடைகள். தானே ஒரு விமானி என்பதால், நானே ஓட்டுகிறேன் என முயற்சிக்கிறார்.

கடைசியில் பைலட்,விமானம் எல்லாம் தயாராகி பயணமாகிறார். அவர் அந்த அசுப நிமித்தத்தை உணராமல் பயணப்பட்டதால் தற்சமயம் நம்மிடையே இல்லை. அவர் திரு ராஜீவ் காந்தி.....!

உங்கள் உள்ளுணர்வை தீட்டி விழிப்புணர்வுடன் இருந்தால் நிமித்தம் உங்களில் பல அற்புதத்தை நிகழ்த்தும். இக்கணம் முதல் இயற்கையின் மொழியை புரிந்துகொள்ள முயலுங்கள். இயற்கை உங்கள் முன் பல முறை இனிய நாதத்தை வாசித்தும், அபாய சங்கையும் ஊதியும் இருக்கிறது. ஆனால் நாம் காதில்லா பிறவியாக இருந்திருக்கிறோம்.

இனி நித்தமும் உங்களில் நிமித்தம் நிகழட்டும்....


Monday, September 6, 2010

நமக்கு நமிதா பற்றி தெரியும், நிமித்தா பற்றி தெரியுமா?

நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் தேவையில்லாத விஷயங்களாகவே இருக்கிறது. ஒரு நாள் இரவில் தனிமையில் அமர்ந்து அன்று காலை முதல் எத்தனை விஷயங்கள் உருப்படியாக நம்முள் சென்றது என சிந்தித்து பார்த்தோம் என்றால் வேடிக்கையாக இருக்கும். மாநகராட்சி குப்பை லாரியில் கூட இவ்வளவு சரக்கு இருக்காது என்ற முடிவுக்கு வருவீர்கள்.

எப்படி ஒரு விஷயத்தை குப்பை அல்லது நன்மையானது என முடிவுக்கு வருவது என கேள்வி எழலாம். உங்களுக்குள் சென்ற ஒரு கருத்து உங்களின் வாழ்க்கையை 0.01% சதவிகிதமேனும் முன்னேற்றுமாயின் அது நன்மையை கொடுக்கும் வைரம். அதைவிடுத்து ஒன்றும் பயனில்லாத கருத்து என்றால் அது நமக்கு தேவையற்றது. விலை மதிக்க முடியாத மனித ஞாபக அடுக்கில் இருக்கும் மக்காத குப்பைக்கு சமம்.

நிற்க. தலைப்பில் இருக்கும் விஷயத்திற்கே நீங்கள் வரவில்லையே என நினைத்தால் நீங்கள் குப்பை லாரி குத்தகைதாரர் என அர்த்தம். வைரத்தை தேடுபவர் என்றால் மேற்கொண்டு கட்டுரையை தொடருங்கள்.

ஜோதிட சாஸ்திரம் ஆறு முக்கிய பகுதிகளால் ஆனது என விவரிக்கிறார் பராசர மஹரிஷி. அவை கணித, சமிதா, கோள, முஹூர்த்த, ப்ரசன்ன, நிமித்த என்பவையாகும். இந்த ஆறு பிரிவுகள் ஷடங்கம் (ஷட் + அங்கம்) என பெயர். வட மொழியில் ஷட் என்றால் ஆறு. ஷடங்கம் என்ற வார்த்தையே திரிந்து சடங்கு என ஆகியது.

ஜோதிட ஷட் அங்கங்களில் கணிதா மற்றும் கோளா என்பது ஜாதகம் கணிப்பதற்கும், சமிதா என்பது பலன் சொல்லுவதற்கும், முஹூர்த்தா என்பது நல்ல நேரம் முடிவு செய்வதற்கும் பயன்படுகிறது. ஆருடம் பார்க்கும் முறை ப்ரசன்ன என அழைக்கிறார்கள். இதில் கடைசியாக இருக்கும் பகுதி தான் நிமித்தா - நன்றாக படியுங்கள் நிமித்தா...நிமித்தா... :)

நிமித்தா என்பதை தமிழில் நிமித்தம் என கூறலாம். இதை மட்டும் தான் ‘ம்’ என முடிக்கும் படி கூறவேண்டுமா அல்லது அந்த பெயரிலும் ம் என சேர்க்கலாமா என என்னிடம் கேட்டால் நீங்கள் இன்னும் குப்பையை சேர்க்க முயற்சிக்கிறீர்கள் என்பேன். :)

ஜோதிடத்தின் பிற அங்கங்களை கற்றுக்கொள்ள நீங்கள் கொஞ்சம் அறிவை கசக்க வேண்டும். நிமித்தம் பற்றி அறிந்துகொள்ள அப்படி ஒன்றும் மெனக்கட வேண்டியது இல்லை. விழிப்புணர்வுடன் உங்களின் புலன்களை வைத்திருந்தால் போதுமானது.

நிமித்தம் என்றால் என்ன? ஜோதிடம் என்பது முக்காலத்தையும் கூறும் ஒரு சாஸ்திரம், அதன் ஒரு பகுதியான நிமித்தமும் இச்செயலையே செய்கிறது. உங்கள் வாழ்க்கை சம்பவங்களை பற்றி நீங்கள் நினைக்கும் பொழுது அந்த ஷணத்தில் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வு வாழ்க்கை சம்பவத்தை பற்றிய ஒரு குறிப்பை சூட்சுமமாக உணர்த்தும். இதை நிமித்தம் என்கிறோம்.

உதாரணமாக உங்கள் நண்பர் நாளை நான் ஒரு இண்டர்வியூவுக்கு செல்லுகிறேன் என கூறும் பொழுது மற்றொரு நண்பர் இனிப்புடன் வந்தார் என வைத்துக்கொள்வோம். இண்டர்வியூ என்ற கருத்து உரையாடப்படும் பொழுது அதே சமயம் ஒரு சுப நிகழ்வு நடைபெற்றால் அது எதிர்காலத்தில் நடக்கும் செயலின் முடிவை சூட்சுமமாக குறிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
முழுமையான ஜோதிட சாஸ்திரத்தை பார்க்கும் ஜோதிடரிடம் நாம் கேள்வி கேட்டவுடன் அந்த ஜோதிடர் சில வினாடிகள் சூழலை கவனிப்பார். அந்த சூழல் சூட்சமாக நம் கேள்வியின் சாதக பாதகத்தை கூறும்.

முற்காலத்தில் ஜோதிடர்கள் திறந்த வெளியிலும் மரத்தடியிலும் அமர்ந்திருந்த காரணம் இது தான். இது போக கேள்வி கேட்கும் நபர் அவர் உடலில் தொடும் பகுதி மற்றும் பேசும் வார்த்தைகள் இவை அனைத்தும் நிமித்தம் ஏற்படுத்தும் காரணமாக இருக்கும்.

நீங்கள் ஒரு பணியைச் செய்யத் துவங்கும் பொழுதும் உங்களை சுற்றி கவனியுங்கள். அங்கே இருக்கும் சூழல் உங்களின் பணியின் முடிவை தெளிவாக கூறும்.

இதை ஒரு உதாரணத்தால் விளக்குகிறேன். நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்கள். கிளம்பும் பொழுது விளையாடிக் கொண்டிருந்த உங்கள் குழந்தை கீழே விழுந்து அடிபட்டுக்கொள்கிறான். இது உங்களின் சுற்றுலா எப்படி இருக்கும் என்பதன் ஒரு சிறிய சாம்பிளாக நிமித்தம் உணர்த்துகிறது. அதுவே நீங்கள் கிளம்பும் பொழுது நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவிருந்த நற்செய்தி ஒன்று வருகிறது என்றால் உங்கள் சுற்றுலா சிறப்பாக இருக்கும் என்பதை காட்டுகிறது.

இப்படி பல உதாரணம் சொல்ல முடியும். நிமித்தத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம். நிமித்தம் என்பது மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும். ஆனால் உண்மையில் அது மிகவும் அற்புதமானது.

நிமித்தம் ஜோதிடர்கள் மட்டும் பயன்படுத்தும் சமாச்சாரம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் மேம்படுத்த நிமித்தம் மிக அவசியம்.

சகுனமும் நிமித்தமும் ஒன்றா? நிமித்தம் உண்மையில் எப்படி வேலை செய்கிறது ? என் வாழ்வில் நிமித்தம் செய்த அற்புதங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(நித்தமும் தொடரும் நிமித்தம்)

டிஸ்கி : இக்கட்டுரைக்கு படங்கள் இணைத்தால் கவனம் திசை திரும்பும் என்பதால் படங்கள் இணைக்கவில்லை...!

Saturday, August 28, 2010

நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே...!

சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கும் கூறுவதற்கும் எனக்கு தயக்கம் உண்டு. அதில் அதி முக்கியமானது சமாதி என்ற ஒரு விஷயம். சமாதி என்ற கருத்தை வெளிப்படுத்தும் பொழுது பலருக்கு இந்த கருத்து புரிவதில்லை. சமாதி பற்றி பேசவோ எழுதவோ என்றும் நான் விரும்பியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் விளக்குவதால் பலர் விளங்காமல் போகலாம். விளக்காமல் போனால் சிலர் வீணாகப் போகலாம். விவரித்தாலும் விவரிக்கவில்லை என்றாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றே என்பது சமாதி என்ற கருத்தில் மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன்.

நம்மில் இருப்பவர்களில் இக்கருத்தை பற்றி அறிந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒரு சிலருக்கு சமாதி என்றால் இறந்த பின் வைக்கும் கல்லறை என நினைக்கிறார்கள். சென்னைக்கு செல்லும் நம் ஆட்கள் கூட அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி பார்க்கும் திட்டத்துடன் செல்லுவதுண்டு. இவர்களுக்கு கல்லறை என்பதை அந்தஸ்தாக கூறும் வார்த்தையே சமாதி. சமாதி என்பதை தெரிந்து கொள்ள முயலாமல் தங்களுக்கு தெரிந்த சமாதி என்பதே சரி என்பவர்கள் இவ்வகை.

இன்னும் சிலருக்கு சமாதி என்பது பல்வேறு ஆன்மீக நூலில் படித்த வாசகம் என்றோ அல்லது பெரிய ஆன்மீக உயர் நிலை என்றோ கருதுவார்கள். என்னிடம் யோகம் பயில வரும் சிலர் புத்தக குப்பைகளை அவர்களுக்குள் சுமந்து வருவார்கள். சமாதிகளையும் சமாதியின் வகைகளையும் இவர்கள் விலாவாரியாக பேசுவார்கள். ஆனால் அந்த நிலை அடைய ஒரு துளி கூட முயற்சி செய்ய மாட்டார்கள்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் இந்த இரண்டு தன்மையையும் கடந்து இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாமல் உடுத்தி, உண்டு, உறங்கி இறந்துவிடுவார்கள்.

எங்காவது சமாதி என்ற வார்த்தையை கேள்விப்பட்டு விளக்கமாக தெரிந்து கொள்ளும் நோக்கில் இவர்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள் தெரியுமா?

முதல் வகை : தம்பி பார்த்து யோகா செய்யுப்பா. யோகா பண்ணி மூளை வெடிச்சு செத்துப்போகிறதைத்தான் சமாதினு சொல்லுவாங்க.
(இவ்வாறு தனக்கு தெரிந்ததை சரி என நினைத்து கொஞ்ச நஞ்ச ஆட்களையும் நஞ்சாக்கிவிடுவார்)

இரண்டாம் வகை : தம்பி சமாதினா சாதாரண விஷயமா? ஹிமாலயாவில ஒரு குருஜி இருக்காராம் அவர் முன்னூறு வருஷமா சமாதியில இருக்காராம். அதுக்கு குண்டலாமிக ஜிர்விஸ்தி சமாதினு பேராம். அதை பத்தி நேத்து தான் படிச்சேன்.
(இதை கேட்டதும் நம் ஆட்கள், ஓ இது பெரிய விஷயம் போல என ஒதுங்கிவிடுவார்கள்)

மூன்றாம் வகை : என்ன தம்பி யோகா அப்படி இப்படினு ஏதோ சொல்லிக்கிட்டு. சமாதினு சொன்னவுடன தான் எனக்கு நியாபகம் வருது, நம்ம வளர்மதிக்கு வர இருபதாம் தேதி கல்யாணம். உனக்கு பத்திரிகை வச்சாங்களா?
(இவர்களுக்கு சமாதி என்பது ஏதோ ஒரு அன்னிய மொழி)

மேற்கண்ட மூன்று நிலையில் கடைசி நிலையில் இருப்பவர்கள் மேம்பட்டவர்கள் என்பேன். முதல் இரண்டு நிலையில் இருப்பவர்கள் மிகவும் கொடூரமானவர்கள், இவர்களால் பலருக்கு தீங்க விளையும் என்பது உண்மை.

சமாதி என்ற விஷயத்தை பற்றி விளக்குவதற்கான விவரிப்பு அல்ல இது. விவரிப்பதால் யாதொரு பயனும் இல்லை. மொழியால் விளக்க முடியாத ஒரு விஷயம் தான் என்றாலும் சமாதியை பற்றி விளக்குவதை விட சமாதியில் இருப்பவர்களை பற்றி விளக்குவது இங்கே அவசியமாகிறது.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சமாதி யோகம் என்ற விஷயம் ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனம் மற்றும் ஐந்து வகையான உணர்வு உறுப்புகளை குவித்து தாரணை என்ற நிலையில் ஒருவர் இருந்தால் அதிலிருந்து த்யாணா என்ற நிலைக்கு செல்லலாம். அந்த த்யாணா (தியானம்) என்ற நிலை விரைவில் அவர்களை சமாதிக்கு இட்டுச்செல்லும். சமாதி நிலையில் இருக்கும் ஒருவருக்கு உடல் உணர்வு இல்லாமல் முழுமையாக அசைவற்று இருப்பார்கள். அவர்களின் சுவாசம் இல்லாமல் நாடி துடிப்பு இல்லாமல் ஒரு மரம் போல இருப்பார்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் வாழும் பிணம்...!

இதைத்தான் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

இவ்வாறு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் அடுத்த நிலை சமாதிக்குமாற்றம் அடைந்துவிடுவார்கள். இவர்கள் பார்க்க சாதாரணமான நம்மை போல வேலைகளில் ஈடுபடுவார்கள் ஆனால் உள்ளே ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு கால தேச வித்தியாசம் இருக்காது. மேலும் சுவாசிக்கும் தன்மையிலும் உள் நிலையிலும் வித்தியாசமாக இருப்பார்கள்.

பூமியின் வட துருவத்திற்கு சென்று வந்த ஒருவர் அங்கே வீசும் பனிப்புயலை பற்றி எவ்வளவு தான் விளக்கினாலும் நமக்கு புரியாது. நாம் பனிப்புயலில் இருந்தால் தானே அது உணர முடியும். அது போன்றதே சமாதி பற்றிய விளக்கமும் என்பேன்.

இறைவனுடன் முழுமையாக கலக்கும் இந்த உயர் ஆன்மீக நிலையை பலர் தவறாக புரிந்துகொள்வதும், தவறாக பயன்படுத்துவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு தவறான நபரின் விடியோ உலகை வட்டமிட்டது. அவர் தன்னை காப்பற்றிக்கொள்ள நான் சமாதியில் இருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்றார் என கேள்விபட்டேன். உலகில் சமாதியை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. இப்படியே போனால் நாளை திருமணம் முடிந்து ‘சமாதி’ முகூர்த்தத்திற்கு நாள் பார்க்க சொல்லுவார்கள்.

தான் சமாதி அடைந்தேன் என அதை விவரிப்பவர்கள் உண்மையில் சமாதி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது அறிக. இவர்களை போன்றவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். முன்காலத்தில் ஆன்மீக வாதிகளின் போர்வையில் இருந்த பலர் தான் பெரிய யோகி என காட்டுவதற்கு, இந்த நாளில் இந்த நேரத்தில் ஜீவசமாதி அடையப் போகிறேன் என அறிவிப்பார்கள். அந்த நாளில் அவர்கள் இருக்கும் இடமும், ஊரும் திருவிழாக் கோலம் கொண்டு திகழும். மக்கள் இவர் சமாதி ஆவதை காண நேரில் வருவார்கள்.

சமாதி கட்டும் குழிக்குள் இந்த யோகி அமர்ந்திருப்பார் நேரம் செல்லும் ஆனால் உடலை விட்டு உயிர் பிரியாது. உண்மையான யோகிக்குதானே அதெல்லாம் முடியும்? இவரோ டம்மி பீஸ்...! நேரம் கடக்க கடக்க மக்கள் கொந்தளிக்க துவங்குவார்கள். இன்னும் தாமதித்தால் விபரீதம் என உணரும் சிஷ்ய கோடிகள் குருவுக்கு தீபாராதனை காட்டி அவரின் உச்சந்தலையில் நன்றாக முற்றிய தேங்காயால் ஒரே போடு...!

குருஜி கபால மோக்ஷம் அடைந்துவிடுவார். சொன்ன தேதியில் ஜீவ சமாதியான (ஆக்கப்பட்ட) யோகியின் புகழ் பரவும். இல்லையேல் மக்கள் குருவை நையப்புடைப்பார்கள் அவர் வேறு ஊரில் ஆசிரமும் தேடுவார். இது போன்று நடந்த சம்பவங்கள் ஏராளம். இவற்றை புரிந்துகொள்ளாத மக்கள் இன்னும் கூட ஆன்மீக உயர் நிலை அடைய தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுவதுண்டு. இப்படிபட்ட (போலி)யோகிகளின் வழிகாட்டினால் இப்படி பட்டவர்களே தானே உருவாகும் சாத்தியம் உண்டு ?

ஏதோ திருமந்திரத்திலும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் மட்டும் இதை பற்றி கூறி இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். அனைத்து மத நூல்களிலும் இக்கருத்து மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஏன் மறைமுகமாக கூறவேண்டும்? உழுத நிலத்தில் தானே விதைக்க முடியும்? இல்லை என்றால் பயிரும் களை என கூறுவார்கள் அல்லவா? அதனால் முழுமையான தெளிவு பிறக்கும் பொழுது மத நூல்களில் இருக்கும் மறை பொருட்கள் விளங்க துவங்கும்.

அப்படிபட்ட வாசகம் தான் பைபிளில் உள்ள “நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே” என்ற வாசகம்.

Isa 2:22
Cease ye from man, whose breath [is] in his nostrils: for wherein is he to be accounted of? (நன்றி bible.cc)

இதற்கு நேரடியான விளக்கம், சமாதியில் இருக்கும் தன்மை கொண்டவர்களை நம்பு உன்னை ஆன்மீக உயர் நிலை அடைய செய்வார்கள் என்பதே ஆகும். சமாதி நிலை கண்டு நாசியில் சுவாசமில்லா மனிதர்கள் முழுமையான ஞான நிலையை அடைந்தவர்கள். அதைவிடுத்து சாதாரணமாக உன்னை போன்று சுவாசிக்கும் மனிதனை வழிகாட்டியாக நம்பி விடாதே என எச்சரிக்கிறது. திருமூலர் கூறிய “செத்திட் டிருப்பார் ” என்ற பதத்தை இங்கே நினைவு கூறுங்கள்.

"i am that I am" போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் முழுமையான யோக நிலையை உணர்வதற்காக அமைந்திருக்கிறது. பைபிளில் மட்டுமல்ல இது போல குரானிலும், குரு கிரந்த சாகிப் என்ற சீக்கிய புனித நூலிலும், பெளத்த மற்றும் சமண நூலிலும் காணக்கிடைக்கிறது.

“நாசியில் சுவாசம் இருக்கும் மனிதனை நம்பாதே” என்ற வாசகத்தை ஒரு கற்று தெளிந்த ஆட்சியாளர் - யாரையும் நம்பாதே என்பதற்கு உதாரணமாக பத்திரிகை பேட்டியில் பேசியது கவலை அளித்தது. இது போன்ற அறிய கருத்துக்களை ஆராயாமல் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது.

நான் அனைத்து மத நூல்களையும் ஆழ்ந்து படித்தவன் அல்ல. எனக்கு தெரிந்தவற்றை அவ்வாசகத்துடன் தொடர்பு கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறேன். இவ்வாசகங்களை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோன்றியதை இங்கே விவரித்தேன். அவ்வளவே..!

சரி... சமாதி என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? நான் கேட்டதற்கு பின்வருமாறு திருமூலர் கூறினார்.

காரிய மான உபாதியைத் தாங்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே

.............. என்ன புரிஞ்சுச்சா?