
“ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய’ என்று, சாதுக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சிவ நாம ஜெபம், யம பயத்தைப் போக்கும் என்பர். பரமேஸ்வரனை ஆராதித்து வழிபட்டால், யம பயம் இராது என்று சொல்கின்றனர். பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள். அந்த காலங்களில், சிவ வழிபாடு செய்பவர்களுக்கு, சகல பாக்கியங்களையும் அளித்து, மோட்சத்தையும் ஈசன் அளிக்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது.
சிவனை வழிபடும் போது, ஸ்ரீ ருத்ர ஜெபம் செய்வது வழக்கம். அதையடுத்து சமகம் என்பதையும் சொல்வர். ருத்ரத்தில் பரமேஸ்வரனுடைய குணாதிசயங்களை வர்ணித்துவிட்டு நமஸ்காரம் செய்வது உள்ளது. இதில் நமஸ்காரத்தை முதலில் சொல்லிக் கொண்டு, பிறகு பரமேஸ்வரனை பற்றிய வாக்கியங்கள் வருகின்றன.
எடுத்தவுடன் நமஸ்காரம் செய்து விட்டால், பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். அதன் பிறகு, நாம் சொல்வதையெல்லாம் அன்புடன் கேட்டு, அனுக்ரகம் செய்து, மோட்சத்தையும் அளிக்கிறார்.
ஒரு வித்வான் சொன்னார்: “ஏ பரமேஸ்வரா… முன் ஜென்மத்தில் நான் உன்னை நமஸ்காரம் செய்யவில்லை. இதை எப்படிச் சொல்ல முடிகிறது என்றால், முன் ஜென்மத்தில் உன்னை நமஸ்காரம் செய்திருந்தால், எனக்கு இந்தப் பிறவி கிடைத்திருக்காது. இப்போது பிறவி கிடைத்திருப்பதால், முன் ஜென்மத்தில் உன்னை நான் நமஸ்காரம் செய்யவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
“அப்படி நமஸ்காரம் செய்யாததற்கு என்னை மன்னித்துவிடு. ஆனால், இப்போது, இந்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்கிறேன்; நான் மறுபடியும் அடுத்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்யப் போவதில்லை; அதற்காகவும் மன்னித்துவிடு. ஏன் தெரியுமா? இந்த ஜென்மாவில் உன்னை நமஸ்காரம் செய்தவனுக்கு, மறு ஜென்மா கிடையாது. மறு ஜென்மாவே இல்லாதபோது, நமஸ்காரம் எப்படி செய்ய முடியும்? “அதனால், சென்ற ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், இந்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம், அடுத்த ஜென்மாவுக்காக ஒரு நமஸ்காரம் ஆக மூன்று நமஸ்காரம்… என்னை ரட்சிக்க வேண்டும்…’ என்று பிரார்த்தித்தாராம் அந்த வித்வான். இப்படி சுலபமாக முக்தி பெறுவதற்கான வழி சிவ நாம ஜெபம், சிவ வழிபாடு, நமஸ்காரம் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது.
ஆக, பரமேஸ்வரனை பிரார்த்தித்தால், வாழ்நாளில் சுகமும், பரலோக சுகமும் கிடைக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ***
ஆன்மிக வினா-விடை! - சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பம்சம் என்ன?
விநாயகருக்கு விரதமிருக்கும் நாள் இது. சங்கடங்கள் விலக, இந்நாளில் விரதமிருந்து, மாலையில் கொழுக்கட்டை படைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து, நாமும் சாப்பிட்டு விரதம் முடித்தால், மனக்கஷ்டம் நீங்கி விடும். ***
No comments:
Post a Comment