Saturday, October 16, 2010

அகப்பேய் சித்தர்

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-4

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-4

சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சலனங் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்!
பாவனைக் கெட்டாதே. 76
என்ன படித்தால்என் .....அகப்பேய்!
ஏதுதான் செய்தால்என்
சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்!
சுட்டது கண்டாயே. 77
தன்னை அறியவேணும் .....அகப்பேய்!
சாராமற் சாரவேணும்
பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்!
பேயறி வாகுமடி. 78
பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!
பிறவி தொலையாதே
இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!
எம்இறை கண்டாயே. 79
கோலம் ஆகாதே .....அகப்பேய்!
குதர்க்கம் ஆகாதே
சாலம் ஆகாதே .....அகப்பேய்!
சஞ்சலம் ஆகாதே. 80
ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே
அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்!
ஆராய்ந்து இருப்பாயே. 81
மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்!
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்!
சின்மய மானவர்கள். 82
பாலன் பிசாசமடி .....அகப்பேய்!
பார்த்தக்கால் பித்தனடி
கால மூன்றுமல்ல .....அகப்பேய்!
காரியம் அல்லவடி. 83
கண்டதும் இல்லையடி .....அகப்பேய்!
கண்டவர் உண்டானால்
உண்டது வேண்டடியோ .....அகப்பேய்!
உன்ஆணை சொன்னேனே 84
அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்!
ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்!
நிட்டையில் சேராதே. 85
நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்!
நாடாதே சொன்னேனே
மீதான சூதானம் .....அகப்பேய்!
மெய்யென்று நம்பாதே. 86
ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்!
ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும் .....அகப்பேய்!
நில்லாது கண்டாயே. 87
தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்!
சூனியங் கண்டாயே
தோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்!
சுத்த வெளிதனிலே. 88
பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்!
போக்கு வரத்துதானே
மெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்!
வீடு பெறலாமே. 89
வேதம் ஓதாதே .....அகப்பேய்!
மெய்கண்டோ ம் என்னாதே
பாதம் நம்பாதே .....அகப்பேய்!
பாவித்துப் பாராதே. 90
------------------------------------------------
2. பரவை - கடல்
3. நடம் - கூத்து
4. நாலுபதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்
6. வாக்காதி ஐவர் - வாக்கு, பாதம், பாணி, பாயுரு,
உபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்
7. மித்தை - பொய்
11. பிருதிவி - மண்
12. தேயு - தீ
17. அத்தி - யானை, நாடி
25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்;
கிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்
28. அறைய - கூற
34. ஆறு - வழி
52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளையத் தூக்கிய பாதம்
69. மரக்கா - மரச்சோலை;
வேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்
72. பசாசம் - பிசாசு
74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது
80. கோலம் - அலங்காரம்
82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை
85. நிட்டை - சிவயோகம்
86. சூதானம் - சாக்கிரதை

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-2

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-2

யோகம் ஆகாதே .....அகப்பேய்
உள்ளது கண்டக்கால்
தேக ஞானமடி .....அகப்பேய்
தேடாது சொன்னேனே. 26
ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்
எம் இறை கண்டாயே. 27
இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்
எந்த விதமாகும்
அறைய நீகேளாய் .....அகப்பேய்
ஆனந்த மானதடி. 28
கண்டு கொண்டேனே .....அகப்பேய்
காதல் விண்டேனே
உண்டு கொண்டேனே .....அகப்பேய்
உள்ளது சொன்னாயே. 29
உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்
உன்னாலே காண்பாயே
கள்ளமுந் தீராதே .....அகப்பேய்
கண்டார்க்குக் காமமடி. 30
அறிந்து நின்றாலும் .....அகப்பேய்
அஞ்சார்கள் சொன்னேனே
புரிந்த வல்வினையும் .....அகப்பேய்
போகாதே உன்னை விட்டு. 31
ஈசன் பாசமடி .....அகப்பேய்
இவ்வண்ணங் கண்டதெல்லாம்
பாசம் பயின்றதடி .....அகப்பேய்
பரமது கண்டாயே. 32
சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்
சங்கற்பம் ஆனதெல்லாம்
பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்
பாழ் பலங்கண்டாயே. 33
ஆறு கண்டாயோ .....அகப்பேய்
அந்த வினை தீர
தேறித் தெளிவதற்கே .....அகப்பேய்
தீர்த்தமும் ஆடாயே. 34
எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்
யோகம் இருந்தாலென் ?
முத்தனு மாவாயோ .....அகப்பேய்
மோட்சமும் உண்டாமோ ? 35
நாச மாவதற்கே .....அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் .....அகப்பேய்
பசுக்களும் போகாவே. 36
நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்
நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால் .....அகப்பேய்
காணக் கிடையாதே. 37
சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது கண்டாயே. 38
உன்றனைக் காணாதே .....அகப்பேய்
ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே .....அகப்பேய்
இடத்தில் வந்தாயே. 39
வானம் ஓடிவரில் .....அகப்பேய்
வந்தும் பிறப்பாயே
தேனை உண்ணாமல் .....அகப்பேய்
தெருவொடு அலைந்தாயே. 40
சைவ மானதடி .....அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் .....அகப்பேய்
சலம்வருங் கண்டாயே 41
ஆசை அற்றவிடம் .....அகப்பேய்
ஆசாரங் கண்டாயே
ஈசன் பாசமடி .....அகப்பேய்
எங்ஙனஞ் சென்றாலும். 42
ஆணவ மூலமடி .....அகப்பேய்
அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி .....அகப்பேய்
கூடப் பிறந்ததுவே. 43
ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்
உள்ளபடி யாச்சே
நன்றிலை தீதிலையே .....அகப்பேய்
நாணமும் இல்லையடி. 44
சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்
சுட்டது சொன்னேனே
எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்
என்னையுங் காணேனே. 45
கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
கண்டார் நகையாரோ?
நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்
நீயார் சொல்வாயே. 46
இந்து அமிழ்தமடி .....அகப்பேய்
இரவி விடமோடி
இந்து வெள்ளையடி .....அகப்பேய்
இரவி சிவப்பாமே. 47
ஆணல பெண்ணலவே .....அகப்பேய்
அக்கினி கண்டாயே
தாணுவும் இப்படியே .....அகப்பேய்
சற்குரு கண்டாயே. 48
என்ன படித்தாலும் .....அகப்பேய்
எம்முரை யாகாதே
சொன்னது கேட்டாயே .....அகப்பேய்
சும்மா இருந்துவிடு. 49
காடும் மலையுமடி .....அகப்பேய்
கடுந்தவம் ஆனால்என்
வீடும் வெளியாமோ .....அகப்பேய்
மெய்யாக வேண்டாவோ. 50

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-1

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-1

நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே!

என்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.

இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.

இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.
--
அகப்பேய் சித்தர் பாடல்கள்
நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1
பராபர மானதடி .....அகப்பேய்
பரவையாய் வந்தடி
தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்
தானே படைத்ததடி. 2
நாத வேதமடி .....அகப்பேய்
நன்னடம் கண்டாயோ
பாதஞ் சத்தியடி .....அகப்பேய்
பரவிந்து நாதமடி. 3
விந்து நாதமடி .....அகப்பேய்
மெய்யாக வந்ததடி
ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்
அதனிடம் ஆனதடி. 4
நாலு பாதமடி .....அகப்பேய்
நன்னெறி கண்டாயே
மூல மானதல்லால் .....அகப்பேய்
முத்தி அல்லவடி. 5
வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்
வந்த வகைகேளாய்
ஒக்கம் அதானதடி .....அகப்பேய்
உண்மையது அல்லவடி. 6
சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்
சாத்திரம் ஆனதடி
மித்தையும் ஆகமடி .....அகப்பேய்
மெய்யது சொன்னேனே. 7
வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்
வண்மையாய் வந்ததடி
தெசநாடி பத்தேடி .....அகப்பேய்
திடன் இது கண்டாயே. 8
காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்
கண்டது சொன்னேனே
மாரணங் கண்டாயே .....அகப்பேய்
வந்த விதங்கள் எல்லாம். 9
ஆறு தத்துவமும் .....அகப்பேய்
ஆகமஞ் சொன்னதடி
மாறாத மண்டலமும் .....அகப்பேய்
வந்தது மூன்றடியே. 10
பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்
பேதமை அல்லவடி
உருவது நீரடியோ .....அகப்பேய்
உள்ளது வெள்ளையடி. 11
தேயு செம்மையடி .....அகப்பேய்
திடனது கண்டாயே
வாயு நீலமடி .....அகப்பேய்
வான்பொருள் சொல்வேனே. 12
வான மஞ்சடியோ .....அகப்பேய்
வந்தது நீகேளாய்
ஊனமது ஆகாதே .....அகப்பேய்
உள்ளது சொன்னேனே. 13
அகாரம் இத்தனையும் .....அகப்பேய்
அங்கென்று எழுந்ததடி
உகாரங் கூடியடி .....அகப்பேய்
உருவாகி வந்ததடி. 14
மகார மாயையடி .....அகப்பேய்
மலமது சொன்னேனே
சிகார மூலமடி .....அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே. 15
வன்னம் புவனமடி .....அகப்பேய்
மந்திரம் தந்திரமும்
இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்
இம்மென்று கேட்பாயே. 16
அத்தி வரைவாடி .....அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும்
மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்
மெய்யென்று நம்பாதே. 17
தத்துவம் ஆனதடி .....அகப்பேய்
சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்
பூத வடிவலவோ. 18
இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்
எம்இறை அல்லவடி
அந்த விதம்வேறே .....அகப்பேய்
ஆராய்ந்து காணாயோ. 19
பாவந் தீரவென்றால் .....அகப்பேய்
பாவிக்க லாகாதே
சாவதும் இல்லையடி .....அகப்பேய்
சற்குரு பாதமடி. 20
எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்
என் மனந்தேறாதே
சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்
சேர்த்துநீ காண்பாயே. 21
சமய மாறுமடி .....அகப்பேய்
தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம் .....அகப்பேய்
ஆராய்ந்து சொல்வாயே. 22
ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்
ஆகாது சொன்னேனே
வேறே உண்டானால் .....அகப்பேய்
மெய்யது சொல்வாயே. 23
உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும்வகை .....அகப்பேய்
உள்ளது சொல்வேனே. 24
சரியை ஆகாதே .....அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் .....அகப்பேய்
கிட்டுவது ஒன்றுமில்லை. 25

No comments:

Post a Comment